ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் புனேயை வீழ்த்தி, 5-வது வெற்றியை கேரளா பிடித்துள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 5-ஆவது வெற்றியைப் பெற்ற கேரள அணி 18 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது.
கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7-ஆவது நிமிடத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கியது கேரளம். வினீத் கொடுத்த "லாங் பாஸ்' மூலம் டக்கென்ஸ் நஸன் இந்த கோலை அடித்தார். இதன்பிறகு ஸ்கோரை சமன் செய்ய புனே அணி போராடியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய கேரள அணி 57-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. வினீத் கொடுத்த கிராஸில் ஹியூஸ் இந்த கோலை அடித்தார். மறுமுனையில் கடுமையாகப் போராடிய புனே அணி கடைசி நிமிடத்தில் ரோட்ரிகஸ் மூலம் கோலடித்தது. எனினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள புனே அணி 15 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.