
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 96-வது இடத்திற்கு முன்னேறியது.
இந்திய கால்பந்து அணி தனது தரவரிசை வரலாற்றில் தற்போது அடைந்துள்ளது 2-ஆவது மிக உயரிய இடமாகும். இதற்கு முன்பாக கடந்த 1996-ஆம் ஆண்டு 94-ஆவது இடத்திற்கு வந்ததது தரவரிசையில் இந்தியாவின் உயரிய இடம்.
இந்திய அணியின் இந்த முன்னேற்றம் குறித்து அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டன்டீன் கூறியது:
“நான் பயிற்சியாளராக பொறுப்பேற்கும்போது இந்திய அணியை முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வருவதையே இலக்காக நிர்ணயித்தேன். அதை எட்டுவதில் எனது பங்கு சிறியது தான். அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்' என்றார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியது:
'இந்திய கால்பந்தின் பொற்காலத்தில் தற்போது இருக்கிறோம். இன்னும் சிறப்பான நாள்கள் வரவிருக்கின்றன. எதிர்வரும் சவால்களில் இந்திய அணி முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்' என்றார்.
அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎஃப்எஃப்) தலைவர் பிரஃபுல் படேல் கூறியது: “இந்திய அணி தரவரிசையில் கண்டுள்ள ஏற்றம், இந்திய கால்பந்தின் திறன் மேம்படுவதை குறிக்கிறது. இந்திய அணி, பயிற்சியாளர், துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்' என்றார்.
இந்திய அணி, கடந்த 2 ஆண்டுகளில் 77 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதும் இது இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் கான்ஸ்டன்டீன் கடந்த 2015 பிப்ரவரியில் பொறுப்பேற்றபோது இந்திய அணி 173-ஆவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.