அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டனின் இறுதியில் இந்தியர்கள் இன்று மோதல்…

First Published Jul 24, 2017, 9:49 AM IST
Highlights
Indians face today at the end of the US Open Grand Prix Gold Badminton ...


அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் காஷ்யப் தனது அரையிறுதியில் 15 - 21, 21 - 15, 21 - 16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் வான் ஹீ ஹியோவைத் வீழ்த்தினார். இதன்மூலம் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் காஷ்யப்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறித்துப் பேசிய காஷ்யப் பேசியது:

"நீண்ட நாள்களுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரையிறுதி ஆட்டம் மிகக் கடினமாக இருந்தது. அரையிறுதியில் என்னை எதிர்த்து விளையாடிய வான் ஹீ ஹியோ ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினார். அதேநேரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்வதற்கு எனக்கு காலஅவகாசம் தேவைப்பட்டது. வான் ஹீ மிக பொறுமையாகவும், அதே நேரத்தில் சரியான ஷாட்களையும் ஆடினார். எனினும் மெதுவாக எனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த நான், இறுதியில் வெற்றி பெற்றேன்' என்றார்.

மற்றொரு அரையிறுதியில் எச்.எஸ்.பிரணாய் 21 - 14, 21 - 19 என்ற நேர் செட்களில் வியத்நாமின் டியென் மின் நுயெனை வீழ்த்தினார். கடந்தாண்டு ஸ்விஸ் ஓபனில் பட்டம் வென்ற எச்.எஸ்.பிரணாய், அதன்பிறகு இப்போதுதான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

இந்த சீசனில் சர்வதேச பாட்மிண்டன் போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றில் இந்தியர்கள் இருவர் மோதுவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும், சாய் பிரணீத்தும் மோதினர். அதில் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சூப்பர் சீரிஸ் போட்டியில் அவர் தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றினார்.

tags
click me!