இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி கொழும்புவில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் நிதாஹஸ் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அதேபோல், இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோற்றிருந்தாலும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் வங்கதேச அணியினர் உள்ளனர்.
இரண்டு லீக் போட்டிகளிலும் இந்தியாவிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற வங்கதேச அணி தீவிரமாக உள்ளது.
இரண்டு போட்டிகளிலும் வங்கதேசத்தை வீழ்த்தியதுபோல, இறுதி போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.
கடந்த போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கினார் சிராஜ். ஷர்துல் தாகூர் ஒரு ஓவரில் ரன்களை வழங்கினால் கூட மற்ற ஓவர்களில் சுதாரித்து கொள்கிறார். ஆனால் சிராஜின் அனைத்து ஓவர்களையும் வங்கதேசம் அணியினர் அடித்து நொறுக்கினர். எனவே இந்த போட்டியில் மீண்டும் சிராஜுக்குப் பதிலாக மீண்டும் உனாட்கட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. எந்த அணியின் முயற்சி வெற்றி தருகிறது? என்பதை பார்ப்போம்..