ஏன் அதுக்குள்ள அவசரப்படுறீங்க..? இனிமேதானே இருக்கு கச்சேரி.. இளம் வீரரை கலங்கடிக்கும் காம்பீர்

By karthikeyan VFirst Published Oct 11, 2018, 10:52 AM IST
Highlights

இளம் வீரர் பிரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடக்கூடாது என்று இந்திய வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இளம் வீரர் பிரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடக்கூடாது என்று இந்திய வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரித்வி ஷா, முதல் போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். இதன்மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்துள்ளார் பிரித்வி ஷா.

ரஞ்சி டிராபி, துலீப் டிராபி ஆகிய தொடர்களில் அறிமுக போட்டியில் சதமடித்த பிரித்வி ஷா, சர்வதேச போட்டியிலும் முதல் போட்டியிலேயே சதம் விளாசினார். சர்வதேச போட்டியில் அறிமுகமாவதால், பதற்றமோ பயமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் பிரித்வி ஷா. அதுதான் அனைவரின் பார்வையையும் பிரித்வி ஷாவின் பக்கம் திருப்பியது. 

பிரித்வி ஷாவின் அபாரமான ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டிவருகின்றனர். பிரித்வி ஷா ஒரு போட்டியில் தான் ஆடியிருக்கிறார். அதற்குள்ளாக சச்சின் டெண்டுல்கருடனும் வீரேந்திர சேவாக்குடனும் ஒப்பிடப்படுகிறார். இவரது ஆட்டத்தை பார்த்த ரெய்னா, பிரித்வி ஷா சேவாக்கை நினைவுபடுத்துவதாக தெரிவித்தார். 

பிரித்வி ஷாவை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கலவை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்தார். பிரித்வி ஷா, இளம் வயது சச்சின் மற்றும் கவாஸ்கரை நினைவுபடுத்துவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் புகழ்ந்திருந்தார்.

பிரித்வி ஷா குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி, பிரித்வி ஷா சிறப்பாக ஆடினார். அவர் ஒரு போட்டியில்தான் ஆடியிருக்கிறார். அவர் நல்ல திறமையான வீரர் என்றாலும், அவர் வெளிநாடுகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வளரட்டும். அதற்குள்ளாக அவரை சேவாக்குடன் எல்லாம் ஒப்பிட வேண்டாம் என்று கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். 

கங்குலியின் கருத்துடன் முன்னாள் கேப்டன் அசாருதீனும் உடன்பட்டிருந்தார். பிரித்வி குறித்து கருத்து தெரிவித்திருந்த அசாருதீன், 18 வயதில் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர் திறமையான வீரர் தான்; எனினும் அதற்குள்ளாகவே முன்னாள் ஜாம்பவான்களுடன் ஒப்பிடக்கூடாது. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடும் வீரர்களை ஒப்பிடவே கூடாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு சிறந்த வீரர்கள் இருந்துள்ளனர். புகழ்ச்சிகள், ஒப்பீடுகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பிரித்வி ஷா அவரது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து ஆட வேண்டும் என அசாருதீன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள கவுதம் காம்பீர், பிரித்வி ஷா மிகத்திறமையான வீரர். அதனால்தான் இன்று அவர் இந்த இடத்தில் இருக்கிறார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை மிக அற்புதமாக அபார சதத்துடன் தொடங்கியுள்ளார். இன்னும் நீண்ட தூரம் அவர் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதனால் இனிமேல் தான் அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்றார்.

பிரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடக்கூடாது. பிரித்வி ஷாவை மட்டுமல்ல; எந்த வீரரையும் மற்ற வீரர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவரவர்க்கென்று திறமையும் தனித்துவமும் உள்ளது. சேவாக்குடன் பிரித்வி ஷாவை ஒப்பிடுபவர்கள், அதற்கு முன்னதாக, இருவரையும் ஒப்பிடலாமா என்று யோசிக்க வேண்டும். இதுபோன்ற ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. பிரித்வி ஷா ஒரு போட்டியில் தான் ஆடியிருக்கிறார். இன்னும் நீண்ட தூரம் அவர் பயணிக்க வேண்டும். ஆனால் சேவாக் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடியுள்ளார். இருவரையும் ஒப்பிடக்கூடாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார். 
 

click me!