முரளி விஜய், கருண் நாயருக்கு ஆப்பு..? பிசிசிஐ அதிரடியால் கலக்கத்தில் வீரர்கள்

By karthikeyan VFirst Published Oct 7, 2018, 10:19 AM IST
Highlights

இந்திய அணியின் தேர்வுக்குழு குறித்து கருத்து தெரிவித்த முரளி விஜய் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

இந்திய அணியின் தேர்வுக்குழு குறித்து கருத்து தெரிவித்த முரளி விஜய் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட அணியில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுவே பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த தொடரில் ஆடுவதற்கே வாய்ப்பு வழங்கப்படாத கருண் நாயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். 

வாய்ப்பே கொடுக்காமல் கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹர்பஜன் சிங், வீரர்கள் தேர்வு எதனடிப்படையில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பகிரங்கமாக தேர்வுக்குழுவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். கருண் நாயரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கருண் நாயரிடம் தேர்வுக்குழு சார்பில் விளக்கமளிக்கபட்டதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜயும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறவில்லை. அதனால் அதிருப்தியில் இருந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்தற்கு பிறகு தன்னை தேர்வுக்குழுவினர் தொடர்புகொள்ளவே இல்லை எனவும் அணி தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்த கருத்துடன் உடன்படுவதாகவும் முரளி விஜய் பகிரங்கமாக தெரிவித்தார். 

முரளி விஜயின் குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்ததோடு, அதை மறுக்கவும் செய்தார். மேலும் முரளி விஜயை தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும், முரளி விஜயின் குற்றச்சாட்டு ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், அணி தேர்வு பற்றி பேசிய முரளி விஜய் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரும் ஒப்பந்தத்தை மீறிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப்படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக்கூடாது. ஐதராபாத்தில் வரும் 11 ஆம் தேதி கிரிக்கெட் வாரிய கூட்டம் நடக்கிறது. அங்கு இந்தப் பிரச்னை எழுப்பப்படும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

click me!