
அர்ஜென்டினா பத்திரிகைகள் எங்களை குறி வைத்து விமர்சித்து வருகின்றன என்று உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி தெரிவித்தார்.
வருகிற 14-ஆம் தேதி ரஷியாவில் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. இதற்காக ரஷியாவே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளில் பெரும்பாலானவை ரஷியா சென்றுவிட்டன. முன்னாள் சாம்பியன் பிரேசில், பிரான்ஸ் உள்பட பல அணிகள் நேற்று ரஷியா போய் சேர்ந்தன.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
ஐஸ்லாந்து, குரோஷியா, நைஜீரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். அர்ஜென்டினா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி ஐஸ்லாந்தை சந்திக்கிறது.
இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி நேற்று பேட்டி ஒன்று அளித்தார். அதில், "இந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் செயல்பாடு எந்த மாதிரி இருக்கிறதோ? அதனை பொறுத்து தான் எனது எதிர்கால சர்வதேச கால்பந்து ஆட்ட வாழ்க்கை அமையும்.
2014-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுக்கான கோபா அமெரிக்கா கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததன் மூலம் நாங்கள் சில கடினமான தருணங்களை சந்தித்தோம்.
இதனால் அர்ஜென்டினா பத்திரிகைகள் எங்களை குறி வைத்து விமர்சித்து வருகின்றன. இந்த போட்டிக்கு நிறைய அணிகள், அதிக நம்பிக்கையுடன் வந்து இருக்கின்றன. எல்லோரும் அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.