தோனிக்கே ஆப்பு அடிக்கும் முன்னாள் வீரர்!! இந்திய அணியில் தல இடத்திற்கு ஆபத்து..?

By karthikeyan VFirst Published Oct 6, 2018, 12:20 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே தோனியை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே தோனியை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனி தற்போது ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொண்டுவருகிறார். 

ஏற்கனவே இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவரும் நிலையில், தோனி சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சொதப்பிவருகிறார். உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் தோனி மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

தோனியின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் மீண்டும் சிறப்பாக ஆடி தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. அதேபோன்றதொரு பதிலடியையும் இப்போதும் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம், அணிக்கு தேவை. கேப்டனுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் போட்டியின் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் தருணங்களை ஏற்படுத்தி கொடுக்கின்றன. எனவே பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரர், இந்திய அணியின் வெற்றிகரமான அனுபவமான முன்னாள் கேப்டன் என்ற முறையில் 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டியது அவசியம். இதே கருத்தைத்தான் முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர். 

தோனிக்கு அடுத்து அவரது விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற இடத்தை ரிஷப் பண்ட் தான் பிடிப்பார் என்பதில் ஐயமில்லை. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரிஷப் பண்ட், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துவருகிறார். எனவே தோனியின் ஓய்விற்கு பிறகு அந்த இடம் ரிஷப்பிற்குத்தான். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை நீண்டகாலம் காக்க வைக்காமல் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே அவருக்கு ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட்டிற்கு ஒருநாள் அணியில் விரைவில் வாய்ப்பு வழங்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே அவரை ஆட வைக்கலாம். தோனியின் ஆட்டம் மற்றும் முக்கியத்துவம் குறித்து நமக்கு தெரியும். அதனால் ஒருசில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ரிஷப் பண்ட்டை ஆடவைப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது என அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!