ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகிய ரவீந்திர ஜடேஜா..! இந்திய அணிக்கு மரண அடி
ஆஃப்கானிஸ்தான் அணி:
ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், ஷமியுல்லா ஷின்வாரி, நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மா, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 45 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து, 16 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
இப்ராஹிம் ஜட்ரான் 38 பந்தில் 40 ரன்கள் அடித்தார். நஜிபுல்லா ஜட்ரான் 10 பந்தில் 17 ரன்கள் அடித்தார். ரஹ்மானுல்லா குர்பாஸின் காட்டடி பேட்டிங்கால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 176 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது.
176 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 6.2 ஓவரில் 62 ரன்களை குவித்தனர். பதும் நிசாங்கா 28 பந்தில் 35 ரன்களும், குசால் மெண்டிஸ் 19 பந்தில் 36 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க - நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்
அதன்பின்னர் தனுஷ்கா குணதிலகா சிறப்பாக பேட்டிங் ஆடி 20 பந்தில் 33 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சா 14 பந்தில் 31 ரன்களை விளாசி வெற்றியை எளிதாக்கினார். ராஜபக்சா அதிரடியாக ஆடி ரன்வேகத்தை துரிதப்படுத்தியதால், அவர் ஆட்டமிழந்தாலும் கூட, 19.1 ஓவரில் இலக்கை அடித்து இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் அடைந்த படுதோல்விக்கு, சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி பழிதீர்த்தது இலங்கை.