ஆஸ்திரேலியா - இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் எந்த பேட்ஸ்மேனுமே சரியாக ஆடவில்லை. அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 19 ஓவரில் வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் பெரேரா 27 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 118 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச்சை முதல் ஓவரிலேயே மலிங்கா அவுட்டாக்கிவிட்டார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார் ஃபின்ச்.
அதன்பின்னர் வார்னருடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இலங்கை அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தனர். இந்த ஜோடியை இலங்கை அணியால் பிரிக்கவே முடியவில்லை. இருவருமே அபாரமாக ஆடி அரைசதம் அடித்து, 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணியை அபார வெற்றி பெற செய்தனர். வார்னர் ஆட்டமிழக்காமல் 60 ரன்களையும் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 53 ரன்களையும் குவித்தனர்.
13வது ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே அடிலெய்டில் நடந்த முதல் டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றதால், 2-0 என தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. கடைசி போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி நடக்கவுள்ளது.