அத்துமீறிட்டீங்க தம்பி.. ஷுப்மன் கில் மீது அதிரடி நடவடிக்கை

By karthikeyan VFirst Published Jan 8, 2020, 1:20 PM IST
Highlights

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில், அம்பயரின் முடிவுக்கு மதிப்பளிக்காமல் அத்துமீறியதற்காக அவருக்கு போட்டி ஊதியம் முழுவதும் அப்படியே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ரஞ்சி தொடரில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், அம்பயர் அவுட் கொடுத்தும், அவர் தவறாக அவுட் கொடுத்துவிட்டதால், பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில் களத்தை விட்டு வெளியேற மறுத்ததும், இதையடுத்து அம்பயர் அவரை மீண்டும் பேட்டிங் ஆட அனுமதித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விவகாரத்தில், ஷுப்மன் கில் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
ரஞ்சி தொடரில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் அத்துமீறலால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. முகமது ரஃபி என்ற அம்பயர், இந்த போட்டியில் முதன்முறையாக அம்பயரிங் செய்தார். அவருக்கு இதுதான் அறிமுக போட்டி. 

ஷுப்மன் கில்லுக்கு அவர் விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதால், அம்பயரின் முடிவால் கடும் அதிருப்தியடைந்த ஷுப்மன் கில், களத்தை விட்டு வெளியேற மறுத்து, அறிமுக அம்பயர் முகமது ரஃபியுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அவுட் முடிவை திரும்பப்பெற்று ஷுப்மன் கில் ஆட அனுமதிக்கப்பட்டார். 

ஷுப்மன் கில்லின் செயல்பட்டாலும், அவர் மறுபடியும் பேட்டிங்கை தொடர அனுமதிக்கப்பட்டதாலும் கடும் அதிருப்தியடைந்த டெல்லி அணி வீரர்கள், பந்துவீச மறுத்து களத்தை விட்டு வெளியேறினர். உடனடியாக போட்டியின் ரெஃப்ரி தலையிட்டு பேசி, பிரச்னையை முடித்துவைத்தார். அதன்பின்னரும் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில், இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் ஆட்டமிழந்தார். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், ஷுப்மன் கில் மீது, போட்டி நடுவரிடம் எந்தவித புகாரையும் அளிக்கப்போவதில்லை என டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்திருந்தார்.

ஆனாலும் ஷுப்மன் கில்லின் செயல்பாடு, விதிமீறல் மட்டுமல்லாது அத்துமீறல் செயல்பாடு. எனவே கில்லுக்கு போட்டி ஊதியம் முழுவதுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அந்த போட்டியின் மொத்த ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதுமாதிரியான விதிமீறல் செயல் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இது தொடர்வதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில், கில்லுக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

click me!