பாகிஸ்தான் சீனியர் வீரரின் 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனம்..? கெரியர் முடிஞ்சுது

By karthikeyan VFirst Published Jul 5, 2019, 4:53 PM IST
Highlights

வங்கதேசத்தை வீழ்த்தினாலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்ற நிலையில், வங்கதேசத்துடன் ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் தான் பாகிஸ்தான் அணி அதன் சிறந்த பிளேயிங் லெவன் வீரர்களை கண்டறிந்து நன்றாக செட் ஆனது.
 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. எனினும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கு முன்னேறியது. 

வங்கதேசத்தை வீழ்த்தினாலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்ற நிலையில், வங்கதேசத்துடன் ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் தான் பாகிஸ்தான் அணி அதன் சிறந்த பிளேயிங் லெவன் வீரர்களை கண்டறிந்து நன்றாக செட் ஆனது.

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் தான் அந்த அணி வெற்றி பெறவே தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஹாரிஸ் சொஹைல் ஆடினார். அந்த போட்டியில் பாகிஸ்தான் மரண அடி வாங்கியது. அதனால் அடுத்த போட்டியில் சொஹைல் நீக்கப்பட்டு ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டார். 

ஆனால் ஷோயப் மாலிக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டக் அவுட்டானார். இதையடுத்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு ஹாரிஸ் சொஹைல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஹாரிஸ் சொஹைல் தான் ஆடினார்.

இந்நிலையில், இன்று வங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் போட்டியிலும் ஹாரிஸ் சொஹைல் தான் ஆடிவருகிறார். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை என்பதால் இந்தியாவுக்கு எதிராக ஷோயப் மாலிக் ஆடியதுதான் உலக கோப்பையில் அவரது கடைசி போட்டி. 

இந்த அணி நன்றாக செட்டாகிவிட்டதால் இனிமேலும் மாலிக் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பேயில்லை என்றே தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் ஆடிவந்த மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடிய போட்டிதான் அவருக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது யூசுஃப் கருத்து தெரிவித்திருந்தார். அதேமாதிரிதான் நடந்துள்ளது. 

ஆனால் பாகிஸ்தான் அணிக்காக நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மாலிக் உலக கோப்பைக்கு பின்னர் ஃபேர்வெல் போட்டியில் ஆடவைக்கப்பட வாய்ப்புள்ளது; வாய்ப்பு இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

click me!