நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையை ஆட்ட முடியாது.. கவாஸ்கர் கருத்துடன் முரண்பட்ட முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jul 31, 2019, 10:17 AM IST
Highlights

இந்திய அணியின் கேப்டனாக கோலியே மீண்டும் நீடிப்பது குறித்த கவாஸ்கரின் அதிரடியான கருத்திலிருந்து முன்னாள் வீரர் ஒருவர் முரண்பட்டுள்ளார்.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேப்டன் விராட் கோலி, ரோஹித்துக்கும் தனக்கும் இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். 

உலக கோப்பை தோல்வியை அடுத்து கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ரோஹித் சர்மா தனக்கு கேப்டனாக செயல்பட கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். எனவே ரோஹித்தை கேப்டனாக நியமித்து அடுத்த உலக கோப்பைக்கு வலுவான அணியை தயார் செய்ய வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவியது. இந்திய அணியில் தற்போதிருக்கும் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க ரோஹித்தால் முடியும் என்பதால் கேப்டனை மாற்ற இதுவே சரியான தருணம் என பிசிசிஐ அதிகாரியே தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது.

ஆனாலும் கோலி தான் கேப்டனாக தொடர்கிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதுமே ஆடுகிறார். மூன்று தொடர்களிலும் கோலி தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன்னதாக ரோஹித்துக்கும் தனக்கும் எந்தவிதமான மோதலும் கிடையாது என செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் கோலி கேப்டனாக நீடிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். 

கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தது தொடர்பாக தேர்வுக்குழுவிற்கு கேள்வி எழுப்பி தனது ஆட்சேபணையை வெளிப்படுத்தியிருந்தார் கவாஸ்கர். இதுகுறித்து கவாஸ்கர் எழுதியிருந்த கட்டுரையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வு குறித்த கலந்தாய்வுக்கு முன்னர் கேப்டனை தேர்வு செய்வது குறித்து விவாதித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் கோலியை கேப்டனாக நியமித்துவிட்டு, பின்னர் அவருடன் அணி தேர்வு குறித்து விவாதித்தது, கோலியை தேர்வுக்குழு கேப்டனாக நியமித்ததா அல்லது அவரை அவரே கேப்டனாக நியமித்துக்கொண்டாரா என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது. எனக்கு தெரிந்தவரை, உலக கோப்பைவரை தான் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

கோலி மீண்டும் கேப்டனாக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே கவாஸ்கரின் இந்த கருத்து அமைந்திருந்தது. இந்நிலையில், கவாஸ்கரின் கருத்துடன் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட்டிருக்கிறார். இதுகுறித்து மஞ்சரேக்கர் பதிவிட்டுள்ள டுவீட்டில், இந்திய அணி தேர்வாளர்கள் மற்றும் விராட் கோலி கேப்டனாக தொடர்வது குறித்த கவாஸ்கரின் கருத்துடன் மரிதையுடன் முரண்படுகிறேன். இந்திய அணி உலக கோப்பையில் படுமோசமாக ஆடவில்லை. 7 போட்டிகளில் வெற்றி பெற்று, வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோற்றது. அதிலும் அரையிறுதியில் மிகக்குறைவான வித்தியாசத்திலேயே தோற்றது. தேர்வாளராக இருப்பவருக்கு நற்பெயரை விட அவர் நேர்மையாக இருப்பதே முக்கியம் என்று மஞ்சரேக்கர் பதிவிட்டுள்ளார். 

Respectfully disagree with Gavaskar Sir with his views on Indian selectors & Virat being retained as capt. No, Ind did not put in a ‘much below par WC performance’, they won 7 lost two. Last one very narrowly. And integrity a far more important quality as selector than stature.

— Sanjay Manjrekar (@sanjaymanjrekar)
click me!