
இலங்கையில் நடக்கவிருக்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்தியா A அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த ரியான் பராகிற்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், அணியின் துணை கேப்டன் பொறுப்பும் ருதுராஜுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திலக் வர்மா தான் இந்த அணிக்கு கேப்டன். இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா A, இலங்கை A, மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2026 போட்டிகள் முடிந்த உடனேயே, ஜூன் 9-ஆம் தேதி இந்தியா A அணியின் தொடர் ஆரம்பமாகிறது. இந்தத் தொடர் ஜூன் 21 வரை நடக்கும்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது ரியான் பராகிற்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. ஆனால், கடுமையான வலியுடன் தான் அவர் ராஜஸ்தான் அணிக்காக ப்ளேஆஃப் போட்டிகளில் விளையாடினார். இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்று ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது. காயமடைந்த பராக், தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்புப் பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட இந்தியா A அணி விவரம்: திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, சூர்யன்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), விப்ராஜ் நிகம், யஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷாத் கான், அனுகுல் ராய்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ருதுராஜ் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அந்த மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வர, இந்தத் தொடர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த பேட்ஸ்மேனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 337 ரன்கள் மட்டுமே ருதுராஜ் எடுத்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 123.44 என்பது பல போட்டிகளில் அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதுபோக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால், கேப்டனான ருதுராஜ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால், வரவிருக்கும் இந்தத் தொடர் கெய்க்வாடிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.