#T20WorldCup இந்திய அணியில் அஷ்வின் இடம்பெற முக்கிய காரணம் ரோஹித்..!

By karthikeyan VFirst Published Sep 11, 2021, 4:56 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் இடம்பெற ரோஹித் சர்மா தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றது, அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. 2017ம் ஆண்டுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஆடாத அஷ்வின், நேரடியாக டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றார்.

விராட் கோலி கேப்டனான பிறகு, அஷ்வினை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டினார். சாஹல் - குல்தீப் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கே முன்னுரிமை கொடுத்தார். ஆனால் அவர்கள் இருவரும் இரண்டே ஆண்டுகளில் சோடைபோனார்கள். இதற்கிடையே டி20 கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்தில் கைவிரலில் காயம் அடைந்து, அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில், அவரது காயம் சரியாகவில்லை.

சுந்தர் காயத்திலிருந்து குணமடையாததால், அவருக்கு பதிலாக சீனியர் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை எடுப்பது குறித்து தேர்வுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, துணை கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஐபிஎல் சீசன்களில் அஷ்வின் பவுலிங்கை எதிர்கொள்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை எடுத்துரைத்து, அஷ்வினை எடுக்க வலியுறுத்தியுள்ளார் துணை கேப்டன் ரோஹித் சர்மா.

5 முறை ஐபிஎல் டைட்டில் வென்றுள்ள ரோஹித் சர்மாவை, டி20 கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக கருதி, அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கும் பிசிசிஐ, அவரது கருத்தை ஏற்றுக்கொண்டது. கோலியும் அஷ்வினுக்கு ஆதரவளிக்க, டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றார் அஷ்வின்.

அஷ்வின் டி20 அணியில் இடம்பெற்றதற்கு ரோஹித் முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.
 

click me!