நீ தொன தொனனு பேசிகிட்டே இருந்தா இந்த லெட்சணத்துல தான் ஆடுவ.. தம்பி பேச்சை குறைச்சா பெரிய ஆளா வரலாம்

By karthikeyan VFirst Published Mar 11, 2019, 4:34 PM IST
Highlights

ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து தொன தொனவென்று பேசிக்கொண்டே இருந்தார் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் தோனிக்கு பதிலாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பவுலர்களை மட்டுமல்லாமல் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்களையும் பாடாய்ப்படுத்திவிட்டார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பை அணிக்கான 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. 

உலக கோப்பைக்கான அணிக்கு தேவைப்படும் வீரர்களில் ஒருவர் ரிசர்வ் விக்கெட் கீப்பர். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. 

தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியபோதும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் நிலையிலும், அவரைவிட ரிஷப் பண்ட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை கெடுத்துக்கொண்டார் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் மூன்று போட்டிகளில் தோனி ஆடியதால் ரிஷப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 2 போட்டிகளில் ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக தோனிக்கு ஓய்வளித்துவிட்டு ரிஷப்பிற்கு நான்காவது போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. 

ஆனால் அணி நிர்வாகத்தினர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் தனக்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கும் பாத்திரமாக ரிஷப் பண்ட் நடந்துகொள்ளவில்லை. விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக செயல்பட்டார். பேட்டிங் ஓரளவிற்கு ஆடினாலும் விக்கெட் கீப்பிங்கில் படுமோசம். 

பேட்ஸ்மேன் அடிக்கத் தவறும் பந்துகளை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்டார். 39வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்பிற்கு ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார். 44வது ஓவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் டர்னரை ஸ்டம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். எளிமையான அந்த ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷப் தவறவிட்டதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து தொன தொனவென்று பேசிக்கொண்டே இருந்தார் ரிஷப் பண்ட். குறிப்பாக சாஹல், குல்தீப், கேதர் ஆகிய ஸ்பின் பவுலர்கள் பந்துவீசும்போது கொஞ்சம் கூட வாயை மூடவேயில்லை. ஸ்டம்பில் மைக் வைக்கப்பட்டிருப்பதால் வீரர்கள் பேசுவது இப்போதெல்லாம் அப்படியே கேட்கிறது. 

தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார். அது ஸ்டம்ப் மைக்கின் மூலம் அனைவருக்கும் கேட்டு பிரபலமாகும். ஆனால் ரிஷப் பண்ட் ஆலோசனை வழங்குவதாக நினைத்து எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார். தான் தோனி அல்ல என்பதை ரிஷப் பண்ட் புரிந்துகொண்டு விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்த வேண்டும். தோனி இல்லாத சமயத்தில் பவுலர்களுக்கு ஆலோசனை வழங்க கோலி, ரோஹித் ஆகியோர் உள்ளனர் என்பதை உணர்ந்து, தனது வேலையை செவ்வனே செய்ய முனைவதுதான் ரிஷப் பண்ட்டின் எதிர்காலத்திற்கு நல்லது. 

அதைவிடுத்து ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு தொன தொனவென பேசினால் விக்கெட் கீப்பிங்கில் எப்படி கவனம் செலுத்த முடியும்? நேற்றைய போட்டியில் பவுலர்களை மட்டுமல்ல, போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்களையும் பாடாய்ப்படுத்திவிட்டார். வர்ணனையாளர்கள் பேசுவது கேட்காத அளவிற்கு இடைவெளியே விடாமல் கத்திக் கொண்டிருந்தார். 

பேச்சை குறைத்து விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தினால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவும் ஜொலிக்கலாம். 

click me!