நான் கேப்டனுக்காகவோ கிரிக்கெட் வாரியத்துக்காகவோ ஆடல.. என் நாட்டுக்காக ஆடுறேன்.. என் வேலை என்னனு எனக்கு தெரியும்.. ரஷீத் கான் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 21, 2019, 5:26 PM IST
Highlights

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராகவும் உலகம் முழுவதும் ரசிகர்களால் மட்டுமல்லாது பெரிய பெரிய ஜாம்பவான்களால் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான் உலக கோப்பையில் சோபிக்கவில்லை. 

உலக கோப்பை தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. 

வளர்ந்துவரும் அணியான ஆஃப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் சாதிக்கும் கனவுகளுடன் இங்கிலாந்துக்கு சென்றது. ஆனால் இதுவரை 5 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராகவும் உலகம் முழுவதும் ரசிகர்களால் மட்டுமல்லாது பெரிய பெரிய ஜாம்பவான்களால் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்களை வாரி வழங்கி, உலக கோப்பையின் மோசமான பவுலிங் என்ற மோசமான சாதனையை செய்தார். 

இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய போட்டிகளிலும் ரஷீத் கான் பெரியளவில் சோபிக்கவில்லை. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நைபுடனான கருத்து முரண்பாடுதான் ரஷீத் கானின் ஆட்டத்திலும் எதிரொலிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. 

இந்த விமர்சனம் எழுந்ததற்கு காரணம் என்னவென்றால், உலக கோப்பைக்கு முன் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் நீக்கப்பட்டு குல்பாதின் நைப் நியமிக்கப்பட்டதற்கு ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் ரஷீத் கானும் ஒருவர். ரஷீத் கான் கேப்டன் மாற்றத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார். ஆனால் அடுத்த உலக கோப்பையை மனதில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆஃப்கான் கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது. அதன்பின்னர் அணியின் நலன் கருதி அனைத்து வீரர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். 

எனினும் தற்போது ரஷீத் கானின் மோசமான பவுலிங்கிற்கு கேப்டனுடனான முரண் தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்ததை அடுத்து அதுகுறித்து பேசியுள்ள ரஷீத் கான், கேப்டன் குல்பாதினுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவருடன் எந்த கருத்து மோதலோ முரண்பாடோ இல்லை. கேப்டன் அஸ்கருக்கு அளித்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் விட இரண்டு மடங்கு தற்போதைய கேப்டன் குல்பாதினுக்கு அளிக்கிறேன். 

நான் கேப்டனுக்காகவோ ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்காகவோ கிரிக்கெட் ஆடவில்லை. எனது நாட்டின் கொடிக்காகவும் நாட்டுக்காகவும் ஆடுகிறேன். அதனால் எனது கடமையும் பொறுப்பும் என்ன என்பது எனக்கு தெரியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் ரஷீத் கான். 
 

click me!