நான் மட்டும் அவுட்டாகாம இருந்திருந்தா நடக்குறதே வேற.. சைனி ஆதங்கம்

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 10:18 AM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜாவும் சைனியும் கடைசிவரை போட்டியை எடுத்துச்சென்றும் கூட விக்கெட்டுகள் இல்லாததால் இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது. 
 

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்ததால், 3 போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இரண்டாவது போட்டியில் நேற்று ஆடியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்கள் அடித்தது. கப்டில் மற்றும் டெய்லரின் சிறப்பான, பொறுப்பான பேட்டிங்கால் 273 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி. 197 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 9வது விக்கெட்டுக்கு டெய்லரும் கைல் ஜாமிசனும் இணைந்து 76 ரன்களை சேர்த்தனர். அந்த பார்ட்னர்ஷிப் தான் இந்த ஸ்கோருக்கு முக்கியமான காரணம். 

இதையடுத்து 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 153 ரன்களுக்கே, பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனாலும் மன உறுதியையும் முயற்சியையும் சற்றும் தளரவிடாத ஜடேஜா, நவ்தீப் சைனியுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 

யாருமே சற்றும் எதிர்பாராத விதமாக நவ்தீப் சைனி அருமையாக பேட்டிங் ஆடினார். களத்திற்கு வந்ததும், ஜடேஜாவிற்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த சைனி, 44வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசினார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை குவித்து சைனியும் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி, கடைசி வரை போட்டியை டீப்பாக எடுத்துச்சென்ற ஜடேஜா, அரைசதம் அடித்தார். கடைசி 4 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 47வது ஓவரில் 12 ரன்கள் அடித்தனர். 48வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சாஹல் ரன் அவுட்டானார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால், கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 49வது ஓவரில் ஜடேஜா அவுட்டாகிவிட்டார். இதையடுத்து இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் தோற்றதன் மூலம் தொடரை இழந்தது இந்திய அணி. 2-0 என நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது. ஆனால் இந்த போட்டியில் நவ்தீப் சைனியின் பேட்டிங் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக அமைந்தது. 

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவ்தீப் சைனி, நான் அவுட்டாகி விட்டு பெவிலியன் திரும்பியதும், நான் அவுட்டான வீடியோவை பார்த்தேன். அதை பார்த்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் ஒருவேளை அவுட்டாகாமல் இருந்திருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும். போட்டியை இவ்வளவு நெருக்கமாக எடுத்துச்சென்று, ஆனால் வெற்றி பெற முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் நான் அவுட்டானதும், அணி வெற்றி பெற முடியாமல் போனதும் எனக்கு வேதனையளித்தது என்று நவ்தீப் சைனி தெரிவித்தார். 

நான் அவுட்டாகாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும் என்று தன்னம்பிக்கையுடன் சைனி கூறியிருப்பது, அவருக்குள் பேட்டிங் ஆடும் திறன் இருப்பதை அவர் அறிந்திருந்திருக்கிறார் என்பதையும், தன்னால் பேட்டிங் ஆட முடியும் என்ற தன்னம்பிக்கை அவரிடம் நிறைய இருக்கிறது என்பதையுமே காட்டுகிறது. 
 

click me!