உலக கோப்பை இறுதி போட்டி.. முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் அதிருப்தி.. அந்த விதியை மாத்தியே தீரணும்.. ஐசிசிக்கு வேண்டுகோள்

By karthikeyan VFirst Published Jul 21, 2019, 1:22 PM IST
Highlights

இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். 

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இறுதி போட்டி மாதிரியான ஒரு போட்டியை காண்பது மிகவும் அரிது. உலக கோப்பை வரலாற்றில் இப்படியொரு இறுதி போட்டி இதுவரை நடந்ததில்லை, இனிமேலும் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். அந்தளவிற்கு அருமையான த்ரில்லான போட்டி அது. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளுமே தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இரு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். நியூசிலாந்து அணி கடுமையாக போராடியது. கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது என்றாலும் வெற்றி சரியான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசி விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், உலக கோப்பை இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முத்தையா முரளிதரன், இரு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். இரு அணிகளில் எது வெற்றி பெற்றது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு அணிகளுக்கும் கோப்பையை பகிர்ந்து கொடுத்திருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். 

மேலும் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் கப்டில் த்ரோ வீசிய பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், அந்த மாதிரி த்ரோ வீசப்பட்ட பந்து பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டு எல்லைக்கோட்டுக்கு ஓடினால் பவுண்டரி கொடுக்கும் விதியை மாற்ற வேண்டும் என்று முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!