
உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகியவை வலுவாக உள்ளது. தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் 5ம் வரிசையும் பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் நன்றாகவே ஆடிவருகிறார். ஆனால் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டு இடங்களும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதேபோல நான்காவது ஃபாஸ்ட் பவுலரும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
ராயுடு நன்றாக ஆடிவந்த நிலையில், திடீரென தொடர்ச்சியாக சொதப்பியதால் அவர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிவருகிறார். விஜய் சங்கர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.
கலீல் அகமதுவை 4வது ஃபாஸ்ட் பவுலராக சேர்க்கும் எண்ணத்தில் அவருக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இவ்வாறு சில சிக்கல்கள் இருக்கும் நிலையில், உலக கோப்பையில் ஆடுவதற்கு இங்கிலாந்து செல்லும் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தெரிந்துகொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், உலக கோப்பை அணி வரும் 20ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டாக வீரர்களை பரிசோதித்துவருவதால் சிறந்த அணியே தேர்வு செய்யப்படும் என்றும் அந்த அணி உலக கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்றும் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.