உலக கோப்பை இறுதி போட்டி த்ரில் சம்பவத்தின் எதிரொலி.. ஓவர் த்ரோ விதிகளில் மாற்றம்..?

By karthikeyan VFirst Published Jul 20, 2019, 5:26 PM IST
Highlights

உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். 
 

உலக கோப்பை வரலாற்றில் இந்த முறை நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. ஒரு இறுதி போட்டிக்கு இருக்க வேண்டிய அனைத்து பரபரப்புகளும் இருந்தன. போட்டி முடியும் கடைசி நொடி வரை பயங்கர த்ரில்லாக இருந்தது. 

242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். 

நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட, அந்த பந்தை பிடித்து கப்டில் த்ரோ அடிக்க, அந்த பந்து, ரன் ஓடும்போது டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தெரிந்து அந்த பந்தை தடுக்காததால், அவர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஸ்டோக்ஸ் தனது பேட்டில் பந்து பட்டு பவுண்டரியை நோக்கி ஓடியதுமே, உடனடியாக மண்டியிட்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அதுவரை நியூசிலாந்து வசம் இருந்த போட்டி, அதன்பிறகுதான் இங்கிலாந்து வசம் வந்தது. அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்தது. 

அந்த எக்ஸ்ட்ரா ரன் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது. ஆனால் அதற்கு 6 ரன்கள் கொடுத்திருக்கக்கூடாது என்றும் கள நடுவர்கள் அவசரப்பட்டு சரியாக சோதிக்காமல் 6 ரன்கள் கொடுத்துவிட்டதாகவும் அம்பயர் சைமன் டஃபெல் தெரிவித்தார். ஐசிசி விதிப்படி, இதுபோன்று த்ரோ விடப்படும் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றால் என்ன செய்ய வேண்டும், எத்தனை ரன்கள் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது.

அதன்படி, ஃபீல்டர் பந்தை த்ரோ விடும் சமயத்தில், இரண்டு பேட்ஸ்மேன்களும் ரன் ஓடும்போது ஒருவரையொருவர் கடந்திருந்தால் அவர்கள் ஓடிய இரண்டு ரன்களையும் சேர்த்து பவுண்டரியுடன் மொத்தமாக 6 ரன்கள் கொடுக்கலாம். ஆனால் நேற்றைய போட்டியில் கப்டில் த்ரோ விட ஸ்டார்ட் செய்யும்போது, ஸ்டோக்ஸும் அடில் ரஷீத்தும் ஒருவரையொருவர் கடக்கவில்லை என்பதால் அதற்கு 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவர்கள் அதை சரியாக கவனிக்காமல் 6 ரன்கள் கொடுத்துவிட்டனர் என்று சைமன் டஃபெல் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அதுவும் ஒரு பெரிய விவாதமானது. இந்நிலையில் ஓவர்த்ரோ விதி மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது. ஐசிசி விதிகளின் காப்பகமாகவும் பாதுகாவலர்களாகவும் இருக்கும் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப், ஓவர் த்ரோ விதிகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!