4 விக்கெட்டுக்கு அப்புறம் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்யூஸ் - திரிமன்னே.. குல்தீப்பின் பருப்பு சுத்தமா வேகல

By karthikeyan VFirst Published Jul 6, 2019, 5:12 PM IST
Highlights

முதல் நான்கு விக்கெட்டுகளை விரைவில் இழந்த இலங்கை அணி, மெதுவாக சரிவிலிருந்து மீண்டுவருகிறது. 
 

முதல் நான்கு விக்கெட்டுகளை விரைவில் இழந்த இலங்கை அணி, மெதுவாக சரிவிலிருந்து மீண்டுவருகிறது. 

உலக கோப்பை தொடரின் லீக் சுற்று இன்று முடியவுள்ள நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி லீட்ஸில் நடந்துவருகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இலங்கையுடன் கடைசி லீக் போட்டியில் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா ஆகிய இருவரும் புவனேஷ்வர் குமாரின் ஓவரை அடித்து ஆடினர். 

ஆனால் பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறினர். பும்ராவின் பவுலிங்கில் 9 பந்துகளை பேட்டிங் ஆடி ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் திணறிய கருணரத்னே, பும்ரா தனக்கு வீசிய 10வது பந்தில் ஆட்டமிழந்தார். கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, மற்றொரு தொடக்க வீரரான குசால் பெரேராவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 

குசால் பெரேராவின் கேட்ச்சை ஐந்தாவது ஓவரில் குல்தீப் கோட்டைவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிய பெரேரா, 18 ரன்களில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். பும்ராவை நிறுத்திவிட்டு 10வது ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. 

அதன்பின்னர் இந்த உலக கோப்பையில் தனது முதல் போட்டியை ஆடும் ஜடேஜா 11வது ஓவரை வீசினார். தனது முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே குசால் மெண்டிஸை வீழ்த்தினார். ஜடேஜா வீசிய பந்தை மெண்டிஸ் இறங்கிவந்து அடிக்கத்தவறினார். அதை பிடித்து வழக்கம்போலவே அதிவேகமாக ஸ்டம்பிங் செய்தார் தோனி. மெண்டிஸ் 3 ரன்களில் நடையைக்கட்ட, அதற்கு அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஃபெர்னாண்டோ. 

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஃபெர்னாண்டோவும் வெளியேற, 55 ரன்களுக்கே இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் மேத்யூஸும் திரிமன்னேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். விரைவில் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மேத்யூஸும் திரிமன்னேவும் அவசரப்படாமல் நிதானமாக ஆடி ரன்களையும் உயர்த்திவருகின்றனர். 

மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க வேண்டிய குல்தீப் யாதவின் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. குல்தீப் யாதவின் பவுலிங்கில் கொஞ்சம் கூட திணறாமல் சிறப்பாக சிங்கிள் ரொடேட் செய்து ஆடினர். குல்தீப்பின் முதல் ஸ்பெல் 6 ஓவர்களில் 32 ரன்களை அடித்தது மேத்யூஸ் - திரிமன்னே ஜோடி. 

இலங்கை அணி 120 ரன்களை கடந்துவிட்டது. மேத்யூஸும் திரிமன்னேவும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் 28வது ஓவரில் பும்ராவின் இரண்டாவது ஸ்பெல்லை கொடுத்தார் கேப்டன் கோலி. பும்ரா தான் தனது இரண்டாவது ஸ்பெல்லில் விக்கெட்டை வீழ்த்திக் கொடுக்க வேண்டும். 

click me!