என்னோட இந்த நிலைக்கு அவருதான் காரணம்.. மனம் திறந்த ராகுல்

By karthikeyan VFirst Published Feb 28, 2019, 1:41 PM IST
Highlights

உலக கோப்பைக்கு முன் ராகுல் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் நன்றாக ஆடிய ராகுல், போட்டிக்கு பின்னர் தன்னுடைய கம்பேக்கிற்கு யார் காரணம் என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்துவந்தார்.

ஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார். 

பின்னர் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட அங்கு சென்றார். ராகுல், இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆட இந்தியா ஏ அணியில் இணைந்தார். பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த விவகாரத்திற்கு பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா ஏ அணியில் இணைந்தது, அவருக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்றும் ராகுல் டிராவிட்டிடம் தஞ்சமடைந்த ராகுல், புது மனிதராகவும் தேர்ந்த வீரராகவும் திரும்பிவருவார் என்றும் நமது ஏசியாநெட் தளத்தில் எழுதியிருந்தோம். 

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு தொடரிலும் சிறப்பாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். முதல் போட்டியில் அரைசதம் அடித்த ராகுல், இரண்டாவது போட்டியில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபிளிக் ஷாட், புல் ஷாட், கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ் என மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டார் ராகுல்.

உலக கோப்பைக்கு முன் ராகுல் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் நன்றாக ஆடிய ராகுல், போட்டிக்கு பின்னர் பேசும்போது, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ஆடும்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் நிறைய நேரம் செலவிட முடிந்தது. அப்போது டிராவிட்டுடன் கிரிக்கெட் குறித்தும் பேட்டிங் குறித்தும் நிறைய பேசினேன். அவரது ஆலோசனைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக ஆடும்போது டிராவிட் நிறைய ஆலோசனைகளை கூறினார் என்று ராகுல் தெரிவித்துள்ளார். 

மேலும் அண்மைக்காலத்தில் நடந்த சம்பவங்கள் களத்திலும் பொது வாழ்க்கையிலும் எனக்கு பெரிய அடியாக இருந்தது. ஆனால் அந்த சரிவிலிருந்து மீண்டெழுந்து வந்துள்ளேன் என்று ராகுல் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். 

ராகுல் டிராவிட்டிடம் தஞ்சமடைந்த பிறகு இது நடக்கும் என்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் ஏற்கனவே எழுதியிருந்தோம். தற்போது அது நடந்திருக்கிறது. அதை ராகுலே இப்போது தெரிவித்திருக்கிறார். 

ராகுல் சஸ்பெண்டுக்கு பிறகு இந்தியா ஏ அணியில் இணைந்தபோது, முதலில் சரியாக ஆடவில்லை. அப்போது கூட ராகுலின் திறமையறிந்த டிராவிட், அவரை விமர்சிக்காமல் ராகுலின் திறமி மீது நம்பிக்கை வைத்து பேசினார். ஃபார்மில் இல்லாதது என்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால் ராகுல் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அதனால் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பலாம் என்று நம்பிக்கையூட்டும்படி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!