IPL-ல் 3 சதம் அடித்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் திணறுகிறார்! இந்திய வீரருக்காக ஃபீல் பண்ணும் காம்ரான் அக்மல்

By karthikeyan VFirst Published Jul 31, 2021, 9:00 PM IST
Highlights

ஐபிஎல்லில் 3 சதம் அடித்த இளம் திறமைசாலி பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது திறமையை நிரூபிக்க திணறுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர், இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் அறிமுகமாவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இஷான் கிஷன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா, நிதிஷ் ராணா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு பெற்றனர்.

ஆனால் இவர்களில் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, இஷான் கிஷனைத்தவிர வேறு யாருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சஞ்சு சாம்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிய சஞ்சு சாம்சன், டி20 தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 34 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.

ஐபிஎல்லில் 3 சதங்கள், விஜய் ஹசாரேவில் இரட்டை சதம் என ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி மலை மலையாய் ரன்களை குவிக்கும் சஞ்சு சாம்சன், சர்வதேச போட்டிகளில் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ஸ்கோர் செய்ய திணறுகிறார். அதற்கு காரணம், அவரது தவறான ஷாட் தேர்வுகளும், அவசர புத்தியும் தான். 

இலங்கைக்கு எதிரான தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் ஏமாற்றமளித்த நிலையில், சாம்சன் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல்,  சஞ்சு சாம்சன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்கு போதுமான அனுபவமும் இருக்கிறது. ஐபிஎல்லில் 3 சதங்கள் அடித்திருக்கிறார். உள்நாட்டு போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல்லில் இருக்குமளவிற்கான அவரது கவனக்குவிப்பு மற்றும் ஷாட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை.  அவரது திறமையை நிரூபிக்கும் அளவிற்கான போதுமான வாய்ப்பு இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை என்று காம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
 

click me!