ஐபிஎல் எப்போது, எப்படி நடத்தப்படும்..? வெளியானது புதிய தகவல்

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 4:53 PM IST
Highlights

ஐபிஎல் எப்போது, எப்படி நடத்தப்படும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுப்பதற்காக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான். நிலைமை சீரடைவதற்கே சில மாதங்கள் ஆகும் என்பதால், ஐபிஎல் நடப்பது சந்தேகம் தான்.

இந்நிலையில், இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட நேர்ந்தால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்படலாம், டி20 உலல கோப்பை அக்டோபர் 18ம் தேதி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஐபிஎல்லை நடத்தலாம் என்பன போன்ற பல கருத்துகள் உலாவந்தன. ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுப்பதுடன், ஐபிஎல் குறித்த பல தகவல்கள் உலா வருகின்றன. 

ஆனால். ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஏப்ரல் 15ம் தேதி ஆலோசனை நடத்தி அதன்பின்னர் தான் ஐபிஎல் குறித்த திடமான முடிவெடுக்கப்படும். 

ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பை, அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும், எனவே ஐபிஎல்லை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பிசிசிஐ நடத்த திட்டமிட வாய்ப்புள்ளது என்றும் ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஐபிஎல்லை ஜூலை அல்லது அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்று பெயரை சொல்ல விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் நடத்தப்படமாட்டாது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவிலிருந்து மீண்டாலும், ஐபிஎல்லை வழக்கம்போல ரசிகர்கள் படைசூழ நடத்தினால், அது ரிஸ்க்காக அமைந்துவிடும். அதேநேரத்தில் அதற்காக ஐபிஎல்லை நடத்தாமல் இருந்தால், ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் கிடைக்கும் வருவாயும் கிடைக்காமல் போகும். எனவே ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலோ, அரசின் உத்தரவை பெறாமலோ ஐபிஎல் நடத்தப்படாது என்பதை பிசிசிஐ உறுதி செய்துவிட்டது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

click me!