டெய்லர் நல்லாத்தான் ஆடுனாரு.. ஆனால் நாங்க தோற்றது அவரால்தான்.. கேப்டன் கோலி சொன்ன காரணம்

By karthikeyan VFirst Published Feb 6, 2020, 10:36 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணத்தை கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

அறிமுக தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களிலும் மயன்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் அரைசதம் அடித்த கோலி, 51 ரன்களில் அவுட்டாக, வெகுசிறப்பாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக அமைந்த ஷ்ரேயாஸ் ஐயர், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார். 5ம் வரிசையில் இறங்கிய கேஎல் ராகுல், அதிரடியாக ஆடி 64 பந்தில் 88 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 347 ரன்களை விளாசியது இந்திய அணி. 

348 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹென்ரி நிகோல்ஸ், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர், கேப்டன் டாம் லேதம் ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

348 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டிலும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். கப்டில் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த டாம் பிளண்டெல் வெறும் 9 ரன்களில் அவுட்டானார். 

இதையடுத்து ஹென்ரி நிகோல்ஸுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய நிகோல்ஸ், களத்தில் நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அவர், பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அவருடன் இணைந்து டெய்லரும் அதிரடியாக ஆட, நியூசிலாந்தின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி அருமையாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இவர்களை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. பவுலர்களால் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாத சூழலில், விராட் கோலி தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் நிகோல்ஸை ரன் அவுட்டாக்கி, இந்த ஜோடியை பிரித்தார்.

பும்ரா வீசிய 29வது ஓவரின் மூன்றாவது பந்தை டெய்லர் அடிக்க, பிட்ச்சுக்கு பக்கத்திலேயே பந்து கிடந்தது. ஆனால் அதற்கு நிகோல்ஸும் டெய்லரும் ரன் ஓடினர். மின்னல் வேகத்தில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்தார் கோலி. 82 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருந்த நிகோல்ஸ் ரன் அவுட். 

இதையடுத்து டெய்லருடன் கேப்டன் டாம் லேதம் ஜோடி சேர்ந்தார். நிகோல்ஸின் விக்கெட்டை இழந்தது, எந்தவிதத்திலும் நியூசிலாந்தின் ரன் வேகத்தை தடுத்துவிடவில்லை. நிகோல்ஸ் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் டாம் லேதம். டெய்லர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, டாம் லேதமும் அதிரடியாக ஆடினார். அதனால் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. 

30-40 ஓவர்களில் டெய்லரும் டாம் லேதமும் இணைந்து இந்திய பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோரின்  பவுலிங்கை பொளந்துகட்டினர். ஓவருக்கு 2 பவுண்டரி அல்லது 2 சிக்ஸர்கள் வீதம் விளாசினர். ஷர்துல் தாகூர் வீசிய 40வது ஓவரில்  டெய்லர் 2 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாச, லேதம் ஒரு சிக்ஸர் விளாசினார். 

இவர்களின் அதிரடியால் 40 ஓவருக்கே 292 ரன்களை குவித்துவிட்ட நியூசிலாந்து அணிக்கு எஞ்சிய ரன்னை அடிப்பது எளிதாக இருந்தது. அரைசதம் அடித்த டாம் லேதம் 62 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, காலின் டி கிராண்ட் ஹோம் ஒரு ரன்னில் ரன் அவுட்டானார். ஜேம்ஸ் நீஷமும் சோபிக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டெய்லர் சதமடித்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும், அது எந்த வகையிலும் அந்த அணியின் வெற்றியை பாதிக்கவில்லை. 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Also Read - ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி.. இந்திய அணியின் மோசமான தோல்வி.. சுவாரஸ்ய சம்பவங்கள்

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணி இந்த போட்டியில் அபாரமாக ஆடியது. 348 ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தோம். ஆனால் அனுபவம் வாய்ந்த ரோஸ் டெய்லரும் டாம் லேதமும் இணைந்து போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர். டாம் லேதமின் பேட்டிங் தான், எங்கள் அணியின் முமெண்ட்டத்தை கெடுத்து வெற்றியை எங்களிடமிருந்து பறிக்க காரணம். அவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. மொத்த கிரெடிட்டும் அவர்களுக்குத்தான் என்று கோலி தெரிவித்தார். 

நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிகோல்ஸின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, ஆட்டத்தில் திருப்புமுனையை பெற்றுவிட்டோம். இனிமேல் எப்படியாவது இதை பயன்படுத்தி நியூசிலாந்து அணி சார்பில் களத்திற்கு வரும் புதிய பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தை அதிகரித்து விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற இந்திய அணியின் திட்டத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக, களத்திற்கு வந்ததுமுதலே அடித்து ஆடி, நிகோல்ஸ் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த லேதமின் இன்னிங்ஸ் அபாரமானது. எனவே லேதமின் பேட்டிங்கை கோலி பாராட்டியதோடு, ஆட்டத்தை இந்திய அணியிடமிருந்து பறித்ததே அவரது பேட்டிங் தான் என்று கூறியுள்ளார். 

click me!