தோனியும் கேதர் ஜாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து ஓரளவிற்கு மீட்டனர். ஆனால் மிகவும் மந்தமாக ஆடியதால் ஸ்கோர் குறைவாக இருந்தது.
உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன.
சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரரும் இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ராகுலுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். நிதானமாக ஆடி களத்தில் நன்றாக செட்டான ராகுல், முகமது நபியின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து ஆட்டமிழந்தார். 53 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிவந்தார். ஆனால் அதை தொடரவில்லை. விஜய் சங்கர் ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக ஆடினார். ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கை அடித்து ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்தார்.
மிடில் ஆர்டரில் நிலைத்து ஆடி தனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட விஜய் சங்கர், 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த கோலியும் 67 ரன்களில் அவுட்டானார். கோலி அரைசதம் அடித்தாலே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றிவிடுவார். ஆனால் இந்த முறை விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற விடவில்லை. முகமது நபி விராட் கோலியை வீழ்த்தினார்.
அதன்பின்னர் தோனியும் கேதர் ஜாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து ஓரளவிற்கு மீட்டனர். ஆனால் மிகவும் மந்தமாக ஆடியதால் ஸ்கோர் குறைவாக இருந்தது. தோனி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ் அரைசதம் அடித்தாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடமுடியவில்லை.
ஹர்திக் பாண்டியாவும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பெரிய ஸ்கோர் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. 225 ரன்கள் என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் ஆடிவருகிறது.