இதெல்லாம் எங்களுக்கு ஒரு டார்கெட்டா..? ராகுல், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் கடின இலக்கை அசால்ட்டா அடித்த இந்தியா

By karthikeyan VFirst Published Jan 24, 2020, 3:57 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டிலும் காலின் முன்ரோவும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோரின் பவுலிங்கை எந்த பேதமுமின்றி இருவரும் அடித்து துவம்சம் செய்தனர்.

பவர்ப்ளேயில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். குறிப்பாக ஷர்துல் தாகூரின் ஓவரை டார்கெட் செய்து அடித்து ஸ்கோர் செய்தனர். பவர்ப்ளே(6 ஓவர்) முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் அடித்திருந்தது. பும்ரா, ஷமி, தாகூர், சாஹல் ஆகியோரின் பவுலிங்கை அடித்து ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை பார்ட் டைம் பவுலரான ஷிவம் துபே பிரித்தார். 19 பந்தில் 30 ரன்கள் அடித்த கப்டிலை துபே வீழ்த்தினார். 

அதிரடியாக ஆடிய முன்ரோ அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். வில்லியம்சன் 26 பந்தில் 51 ரன்களும், டெய்லர் 27 பந்தில்54 ரன்களும் அடிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்களை அடித்தது. 

204 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ராகுலும் கேப்டன் கோலியும் இணைந்து நியூசிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கினர். குறிப்பாக ராகுல், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தனது கிளாஸ் பேட்டிங்கை மீண்டுமொருமுறை ஆடி அசத்தினார். 

அதிரடியாக ஆடிய ராகுல், அரைசதம் அடித்தார். வெறும் 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ராகுல்  - கோலியின் அதிரடியால் இந்திய அணி 10 ஓவரில் 115 ரன்களை குவித்தது. ராகுல் அவுட்டான அடுத்த இரண்டாவது ஓவரிலேயே கோலியும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களத்திற்கு வந்த ஷிவம் துபே ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 13 ரன்களில் நடையை கட்டினார். ராகுலும் கோலியும் இணைந்து அடித்தளத்தை அபாரமாக அடித்து கொடுத்ததால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வேலை எளிதானது. ஆனாலும் ஷ்ரேயாஸ் ஐயர் மந்தமாக ஆடாமல், அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். ராகுல், கோலி, துபே என மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டதால், ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் சற்று கவனமாக ஆடினர். இலக்கை நெருங்கியதும் ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். 

அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து 19வது ஓவரிலேயே 204 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டி இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

click me!