
சிஎஸ்கேவில் தோனி:
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் தோனி, 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காகத்தான் ஆடினார். சூதாட்டப்புகார் காரணமாக அந்த 2 சீசன்களிலும் சிஎஸ்கே அணி தடைபெற்றிருந்தது.
சிஎஸ்கே அணிக்காக ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் அளப்பரிய பங்காற்றியிருக்கிறார் தோனி. சிஎஸ்கே அணியை ஒரு சீசனை (2020) தவிர ஆடிய மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு அழைத்து சென்ற தோனி, சிஎஸ்கே அணியை 9 முறைஃபைனலுக்கு அழைத்து சென்று அதில் 4 முறை கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே திகழ, தோனி தான் காரணம். ஐபிஎல் கோப்பை போக, 2 முறை சாம்பியன்ஸ் லீக் டிராபியையும் வென்று கொடுத்திருக்கிறார் தோனி.
கேப்டன்சியிலிருந்து விலகிய தோனி:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் நிலையில், ஐபிஎல்லிலும் அவரது கெரியரின் முடிவில் உள்ளார். 15வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியை ஜடேஜாவை முதல் வீரராக தக்கவைக்க சொல்லிவிட்டு, தன்னை 2வது வீரராகவே தக்கவைக்க சொன்னார் தோனி. அதன்படி, தோனியைவிட அதிகமான தொகைக்கு ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
அப்போதே, ஜடேஜா தான் அடுத்த கேப்டன் என்று ஊகிக்கப்பட்டது. அதேபோலவே, வரும் 26ம் தேதி ஐபிஎல் 15வது சீசன் தொடங்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து இன்று விலகிவிட்டு, ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தார்.
சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கருத்து:
எனவே இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்த நிலையில், அதுகுறித்து சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காசி விஸ்வநாதன், இதுதான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. கண்டிப்பாக அடுத்த சீசனில் ஆடுவார். தோனியின் முடிவுகளுக்கு நாங்கள் எப்போதுமே மதிப்பளிப்போம். எங்கள் அணியின் வலிமைக்கு காரணமான தூண் அவர். அவர் அதே தூணாக தொடர். புதிய கேப்டன் ஜடேஜாவை வழிநடத்துவார். சிஎஸ்கேவின் நலனில் என்றைக்குமே அக்கறை கொண்டவர் தோனி என்றார் காசி விஸ்வநாதன்.
இந்த ஐபிஎல் சீசனில் போட்டிகள் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே நடக்கவுள்ளன. தோனி தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என உறுதியளித்திருப்பதால், அடுத்த சீசனில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.