ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த இந்திய அணி..! முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வி

By karthikeyan VFirst Published Nov 27, 2020, 6:08 PM IST
Highlights

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் சதமடித்தார். வார்னர் 69 ரன்கள் அடித்தார். இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த நிலையில், அதைப்பயன்படுத்தி ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் இணைந்து பொளந்துகட்டினர். அதிரடியாக ஆடிய ஸ்மித் 62 பந்தில் சதமடிக்க, மேக்ஸ்வெல் 19 பந்தில் 45 ரன்களை விளாசினர். வார்னர், ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 374 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

375 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் மயன்க் அகர்வாலும் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கிய நிலையில், மயன்க் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், கேஎல் ராகுல் 12 ரன்களிலும் வெளியேற, 13.3 ஓவரில் 101 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய தவான் அரைசதம் அடித்தார். 4 விக்கெட்டுக்கு பிறகு தவானுடன் ஜோடி சேர்ந்த அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய பவுலர்களின் பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் பாண்டியாவும் அரைசதம் அடிக்க, இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

தவான் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா, ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 308 ரன்களுக்கு சுருண்டதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
 

click me!