கோலி, ரோஹித்துக்கு சற்றும் சளைத்தவர் இல்ல அவரு..! இந்திய பேட்ஸ்மேனுக்கு ஆஷிஸ் நெஹ்ரா புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 26, 2021, 4:55 PM IST
Highlights

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய ஜாம்பவான்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை சூர்யகுமார் யாதவ் என்று ஆஷிஸ் நெஹ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி தேர்வாளர்களால் தன்னை புறக்கணிக்கமுடியாத சூழலை உருவாக்கினார் சூர்யகுமார் யாதவ்.

அதன்விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், அந்த தொடரில் அபாரமாக ஆடினார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிய சூர்யகுமார் யாதவ், முதல் ஒருநாள் போட்டியில் 32* ரன்கள், 2வது போட்டியில் 53 ரன்கள் மற்றும் 3வது போட்டியில் 40 ரன்கள் என 3 போட்டிகளிலும் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து நடந்த முதல் டி20 போட்டியிலும் மந்தமான பிட்ச்சில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக ஆடி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் சூர்யகுமார் யாதவ்.

ஃப்ளிக் ஷாட்டுகளை அபாரமாக ஆடக்கூடிய சூர்யகுமார் யாதவ், அனைத்து விதமான ஷாட்டுகளையும் நன்றாக ஆடக்கூடிய தெளிவான வீரர். பல விதமான ஷாட்டுகளை தன்னகத்தே கொண்ட சூர்யகுமார் யாதவ், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்திய அணிக்காக கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி அபாரமாக ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள ஆஷிஸ் நெஹ்ரா, இந்திய அணிக்கு இப்போது எத்தனை பாசிட்டிவ்கள் இருந்தாலும் என்னை பொறுத்தமட்டில் பெரிய பாசிட்டிவ் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான். அருமையாக ஆடிவருகிறார். அவர் 2 போட்டிகளில் கிடைத்த தொடக்கங்களை மிகப்பெரிய இன்னிங்ஸ்களாக மாற்றவில்லை என்றாலும், திறமையில் அவர் எக்ஸ் ஃபேக்டர் கிரிக்கெட்டர். 

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சூர்யகுமார் யாதவ். அவர்களுக்கு நிகரான பேட்ஸ்மேன் சூர்யகுமார். எந்த பேட்டிங் ஆர்டரில் எப்படிப்பட்ட சூழலில் இறக்கினாலும், அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு அபாரமாக ஆடுகிறார் சூர்யகுமார் யாதவ் என்று ஆஷிஸ் நெஹ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!