ஐயா அவசரத்துல அப்படி பண்ணிட்டேன்.. என்னை திரும்ப சேர்த்துக்கங்க.. அம்பாதி ராயுடு அந்தர் பல்டி

By karthikeyan VFirst Published Aug 30, 2019, 3:18 PM IST
Highlights

தவான், விஜய் சங்கர் ஆகிய இருவரும் உலக கோப்பையின் இடையே காயத்தால் வெளியேறிய போதும் கூட, ராயுடு புறக்கணிக்கப்பட்டார். அதனால் ஏற்கனவே அவருக்கு இருந்த அதிருப்தி, விரக்தியாக மாறியது. உலக கோப்பை அணியில் வேண்டுமென்றே, தான் ஓரங்கட்டப்பட்டதாக நம்பிய ராயுடு, கடந்த ஜூலை 3ம் தேதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 
 

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு, உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் திடீரென ஓய்வு அறிவித்தார். இந்நிலையில், தற்போது தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். தான் மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்புவதாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் ராயுடு. 

உலக கோப்பை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்டதிலிருந்தே, நான்காம் வரிசை சிக்கல் இந்திய அணியில் இருந்துவந்தது. நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ரஹானே, மனீஷ் பாண்டே, ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். 

ஒருவழியாக ராயுடு அந்த இடத்திற்கு உறுதி செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கு பின், ராயுடுதான் இந்திய அணியின் நான்காம் வரிசை என கேப்டன் கோலி உறுதி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு கழட்டிவிடப்பட்டு உலக கோப்பை அணியில், ஆல்ரவுண்டர் என்பதால் விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். 

அப்போதே ராயுடு அதிருப்தியடைந்தார். ஆனால் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இருந்தார். தவான், விஜய் சங்கர் ஆகிய இருவரும் காயத்தால் வெளியேறிய போதும் கூட, ராயுடு புறக்கணிக்கப்பட்டார். அதனால் அதிருப்தி விரக்தியாக மாறியது. உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட ஏமாற்றத்தால் விரக்தியடைந்த ராயுடு, கடந்த ஜூலை 3ம் தேதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி ஒருநாள் தொடரில் ஆடவந்த ராயுடு, ஓய்வு முடிவை சிந்தித்துத்தான் எடுத்தேன் என்றாலும், தற்போது மனம் மாறியுள்ளது. எனவே தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவசரத்தில் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டதாகவும் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விரும்புவதாகவும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அம்பாதி ராயுடு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றுவிட்டார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அவர் 2019-20ம் ஆண்டுக்கான சீசனில் ஹைதராபாத் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

click me!