
இந்திய கிரிக்கெட் வீரர்களை ஏ+, ஏ, பி, சி ஆகிய பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியல்:
ஏ+, ஏ, பி, சி ஆகிய 4 பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு முறையே ஆண்டுக்கு ரூ.7 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.1 கோடி என்ற அளவில் ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும்.
கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகிய மூவர் மட்டுமே ஏ+ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோர் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
ஆகாஷ் சோப்ரா அதிருப்தி:
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ஏ+ பிரிவில் சேர்த்திருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். ஜடேஜாவை ஏ+ பிரிவில் சேர்க்காததற்கு அதிருப்தி தெரிவித்த ஆகாஷ் சோப்ரா, அடுத்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தத்திலாவது பிசிசிஐ ஜடேஜாவை ஏ+ பிரிவில் சேர்க்கும் என நம்புவதாக தெரிவித்தார்.