சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By Velmurugan sFirst Published Feb 11, 2023, 11:45 AM IST
Highlights

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 6 ஆண்டுகள் முடிந்ததை முன்னிட்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மகா நவசண்டி ஹோமம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தனது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். 

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மகா நவசண்டி ஹோமம் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 10க்கும் மேற்பட்ட குருக்கள் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணிவரை விக்னேஷ் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தேவி  ஆவாஹனம், பைரவர் பலி மற்றும் மகா தீபாரதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகாசண்டி ஹோமம்,  மகா பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. முன்னதாக, சமயபுரம் மாரியம்மன் உற்சவர் அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

click me!