Kashi Facts : காகங்கள் கரையாது, மாடு முட்டாது.. காசியில் மட்டுமே நடக்கும் நம்ப முடியாத ஆச்சர்யங்கள்..

By Ramya sFirst Published Mar 25, 2024, 12:10 PM IST
Highlights

காசியில் மட்டும் நிகழும் சில வியப்பூட்டும் ஆச்சரயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஏழு ஜெனங்களிலும் செய்த பாவங்களைப் போக்கும் புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. காசியின் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். சிலர் நேரிலும் சென்று பார்த்திருப்பார்கள். மேலும் காசியில் பல ஆச்சர்யமூட்டும் விஷயங்களை பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

இந்துக்களின் மிக முக்கியமான புனித தலங்கள் என்றால் அது காசியும், ராமேஸ்வரம் தான். புனித நகராக கருதப்படும் காசி நகரம் பல விசித்திரங்களையும், ஆச்சர்யங்களை கொண்ட நகரமாக உள்ளது. ஆம். காசியில் மட்டும் நிகழும் சில வியப்பூட்டும் ஆச்சரயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

காசி வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல, அது ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடமாகவும் உள்ளது. காசியில் நம்ப முடியாத பல ஆச்சர்யங்கள் உள்ளன. காசியில் காகங்கள் கரைவதில்லை, நாய்கள் குரைப்பதில்லை, மல்லிகைப்பூ மணப்பதில்லை, மாடுகள் முட்டுவதில்லை  என அடுக்கிக் கொண்டே போகலாம். 

குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்..? மற்ற தெய்வத்திற்கு சக்தி இல்லையா..??

காசியில் எங்காவது எப்போதுமே ஒரு பிணம் எரிந்து கொண்டே இருக்கிறதாம். 3000 ஆண்டுகளாக இது நடந்து வருகிறதாம். அங்கு எத்தனை பிணங்கள் எரிந்தாலும் நாற்றமே வருவதில்லை. புகை தான் மூச்சை முட்ட செய்யும். காசியின் அடையாளமாக இருக்கும் கங்கை நதிக்கரையில் புகழ்பெற்ற 48 காட் அதாவது படித்துறைகள் உள்ளன. அதில் அசி காட், மணிகர்னிகா காட், அரிச்சந்திரன் காட், அனுமன் காட் ஆகியவை முக்கியமானவை ஆகும். 

காசியில் இறைவனை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் தான் இங்கேயே வசிப்பதாக இங்குள்ள துறவிகள் கூறுகின்றனர். கங்கையில், குளிக்கலாம், படித்துறையில் படுத்துக் கொள்ளலாம், அன்னதானமும் எங்காவது கிடைத்துவிடும்.. எனவே கர்மா இல்லாத வாழ்க்கை காசியில் சாத்தியம் என்கின்றனர் துறவிகள். 

இங்கு எப்போதும் சிவசக்தி நிலை அதிர்வுகள் வெளியாகி கொண்டே இருப்பதால் தியானமும் யோகமும் எளிதில் வசப்படும் என்கின்றனர். ஈசனால் வடிவமைக்கப்பட்ட காசி நகரில் 468 சக்தி மையங்கள் செயல்படுகின்றன. நமது 108 ஆதாரப்புள்ளிகளை செயல்படுத்த இங்கே 108 சிவ தலங்கள் அமைந்துள்ளன. அவை 54 சிவ தலங்களாகவும், 54 சக்தி தலங்களாகவும் உள்ளன. 

காசியில் செய்யப்படும் சப்த ரிஷி பூஜை ஈசனால் கற்பிக்கப்பட்டது. காசியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் ஆலயம் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிக்கும். இங்கே 12 ஜோதிர் லிங்கத்தின் மகிமைகள் சொல்லும் கேந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசி அன்னப்பூரணி தரிசனமும் அலாதி அனுபவத்தை தரும். அதே போல் காசியில் உள்ள விசாலாட்சி அம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றது.

காசி விஸ்வநாதர் ஆலயம், விசாலாட்சி ஆலயம் எங்கு சென்றாலும் குறுகிய சந்துகள் வழியாகவே செல்ல வேண்டும். ஆம். குறுகிய தெருக்களால் நிறைந்துள்ளது காசி நகரம். காசியின் தெருக்களில் நாய்கள் அதிகமாக இருக்குமாம். ஆனால் இந்த நாய்கள் புதிதாக யாரை பார்த்தாலும் குரைப்பதுமில்லை, கடிப்பதுமில்லை. அதே போல் காசி நகரம் முழுவதும் பசு மாடுகளும், காளை மாடுகளும் காணப்படுகின்றன. அதன் அருகில் சென்றாலோ அல்லது அதை நாம் அடித்து நகர செய்தாலோ மாடுகள் தனது எதிர்ப்பை எந்த விதத்திலும் காட்டுவதில்லை.

அதே போல் காசியில் இருக்கும் காகங்கள் கரைவதில்லை. மேலும் காசியில் கருடனையும், பல்லியையும் எங்குமே பார்க்க முடியாது.  இங்கு குடிகொண்டுள்ள விசாலாட்சியின் சக்தியே இதற்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ முற்காலத்தில் இங்கு வாழ்ந்த சித்தர்களின் சக்தியால் தான் இந்த ஆச்சர்யங்கள் எல்லாம் நடப்பதாக கூறுகின்றனர். 

காசிக்கு காவல் தெய்வம் கால பைரவர்.. இவரை வணங்காமல் காசி யாத்திரை முடிவடையாது. காசி மக்கள் இந்த காலபைரவரை தங்கள் நீதிபதியாகவே கருதுகின்றனர். தாங்கள் ஏதேனும் தவறு செய்தால் கால பைரவர் தங்களை அடுத்த பிறவியில் காசியில் பிறக்கவிட மாட்டார் என்று பயப்படுகின்றனர். 

ஓகோ.. இந்த காரணத்துக்காக தான் கோவில்ல மணி அடிக்கிறாங்களா..?! தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..

மூவுலகும் காசிக்கு இணையாகாது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக ஒற்றுமை உள்ளது. காசியில் வசிக்கும் இந்துக்கள் ராமேஸ்வரம் வர விரும்புவதும், தமிழ்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் காசிக்கு செல்ல விரும்புவது நீண்டகாலமாக பின்பற்றும் வழக்கமாக உள்ளது. அந்த காலங்களில் காசிக்கு சென்று தரிசனம் மிகுந்த சிரமமான விஷயம். எனவே காசிக்கு செல்வதில் சிரமங்களை கருத்தில் கொண்டு அதிவீர ராம பாண்டியர் தென் காசி என்ற தலத்தை உருவாக்கி அங்கே விஸ்வநாதரை எழுந்தருள செய்தார்.

அதே போல் 16-ம் நூற்றாண்டில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஈசனின் ஆணைப்படி சிவகாசி என்ற தலத்தை உருவாக்கி அங்கு காசி விஸ்வநாதரை எழுந்தருள செய்தார் என்கிறது வரலாறு. சங்க இலக்கியங்களிலும் காசி பற்றிய குறிப்புகள் உள்ளன. காசி நகரம் ஆன்மீக அடையாளம் நிறைந்த தொன்மையான நகரம் என்பது அங்கு சென்றால் புரியும்..

click me!