கெட்டவனான துரியோதனனுக்கும் கோயில் உண்டாம் தெரியுமா?

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 11:50 PM IST
Highlights

புராணக் கதைகளில் வில்லன்கள் தான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார்கள்.அவர்களை வைத்து தான் கதையே சுவாரசியமாக இருக்கும்.புராணக்கதைகள் மட்டுமல்ல இன்றைய திரைத்துறையிலும் கூட அப்படி தான்.ஏன் நம் வாழ்விலும் கூட எதிரிகளை வைத்து தான் நம் முன்னேறுவது பின் தாழ்த்துவது எல்லாம் நடைபெறுகிறது.  
 

புராணக் கதைகளில் வில்லன்கள் தான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார்கள்.அவர்களை வைத்து தான் கதையே சுவாரசியமாக இருக்கும்.புராணக்கதைகள் மட்டுமல்ல இன்றைய திரைத்துறையிலும் கூட அப்படி தான்.ஏன் நம் வாழ்விலும் கூட எதிரிகளை வைத்து தான் நம் முன்னேறுவது பின் தாழ்த்துவது எல்லாம் நடைபெறுகிறது.  

அதுபோன்று கௌரவ சகோதரர்களில் மூத்தவராகவும், மகாபாரதத்தின் முக்கிய எதிரியாகவும் துரியோதனன் இருந்தார்.பாண்டவர்களுக்கு மகாபாரதத்தில் முதல் எதிரியாக இருந்தவன் துரியோதனன் தான். இன்றும்  மகாபாரத கதையை அறிந்த பலர் இவனை வெறுக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் இவனை தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

கேரளாவில் உள்ள கொல்லம் என்ற ஊருக்கு அருகே தான் துரியோதனனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. தென்னிந்தியாவில் துரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோவில் இது மட்டும் தான். ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோவிலின் பெயர் 'பொருவழி பெருவிருத்தி மலநாட‌ கோவில்'.

இந்த ஊரில் துரியோதனனுக்கு கோவில் அமைந்ததற்கு பின்பு ஒரு வரலாறு உள்ளது. பாண்டவர்களை தேடி துரியோதனன் அலைந்து திரிகையில் இந்த ஊருக்கு வந்திருக்கிறான். அப்போது அவன் மிகவும் களைப்புற்று இருந்ததால் ஒரு குருக்கள் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டு இருக்கிறான். அவன் தாகத்தை தீர்த்ததோடு மட்டும் இல்லாமல் அவனை நன்கு உபசரித்தும் இருக்கின்றனர் அங்கு இருந்தவர்கள்.

முருகப்பெருமானின் சிலையை பெண் வடிவில் கண்டிருக்கிறீர்களா?

இதனால் துரியன் மனம் மகிழ்ந்து அந்த ஊருக்கு நிறைய நல்ல காரியங்களை செய்து இருக்கிறான். அதோடு இப்போது துரியோதனனுக்கு கோவில் இருக்கும் அந்த குன்றின் மீது அமர்ந்து அந்த ஊரின் நலனுக்காக தவம் புரிந்தும் இருக்கிறான். அவன் அன்று செய்த நல்லவைகளையும் அந்த ஊருக்காக அவன் புரிந்த தவத்தையும் போற்றும் வகையில் அவனுக்கு அங்கு கோவில் கட்டி இன்றளவும் அந்த ஊர் மக்கள் அவனுக்குரிய மரியாதையை செய்து வருகின்றனர்.

கேரளாவில் உள்ளதை போல இதேபோன்று  வட இந்தியாவில் உள்ள உத்தர்காசி என்னும் இடத்திலும் துரியனுக்கு கோவில் உள்ளது. துரியோதன் மந்திர என்றழைக்கப்படும் அந்த கோவிலில் துரியோதனனுக்கு பூஜைகள் நடப்பது கிடையாது. மாறாக அங்கு சிவனுக்கே பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்த மாதிரியான கோவில்கள் அமைத்தற்குக் காரணம்,எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஏதோ ஒரு நற்குணம் மற்றும் நற்பண்புகள் இருக்கும்.அதனை எடுத்துரைக்கவே இக்கோவில்கள் அமைக்கப்பட்டன. அதனால் உங்களை சுற்றி  இருப்பவர்களிடம் கெட்டதை மட்டும் தேடாமல் நல்லதையும் தேடுங்கள். மனதில் வன்மம் உண்டாகாது.

click me!