குரு யார்..? தட்சிணாமூர்த்தி யார்..? பலருக்கும் தெரியாத உண்மை இதோ!

By Kalai SelviFirst Published May 2, 2024, 10:13 AM IST
Highlights

நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை இந்த கட்டுரையில் நாம் காணலாம்..

பொதுவாகவே, எல்லாரும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிப்படுகிறோம். ஆனால், அப்படி செய்யும் போது நாம் நம்மை அறியாமல் சில தவறான செய்கைகளை செய்து விடுகிறோம். அவற்றில் ஒன்றுதான் குரு பகவான் என்பது யார், தட்சிணாமூர்த்தி என்பவர் யார் என்பது பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை. 

அதுபோல், கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து இருக்கும், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக் கடலை மாலை போடுவதும் மற்றும் மஞ்சள் வஸ்திரம் சாத்துவது வழக்கம். ஆனால், இப்படிச் செய்யலாமா..? நவகிரகங்களில் ஒன்றாக கருதப்படும் குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இது உங்களுக்கு புரியும். அதுமட்டுமின்றி, பலருக்கு வியாழக்கிழமை மற்றும் குருபெயர்ச்சி காலத்தில், நவக்கிரக குருவையா அல்லது தட்சிணாமூர்த்தியா என யாரை வணங்குவது என்று தெரிவதில்லை. சரி வாங்க.. இப்போது இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவங்கள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

யார் இந்த குரு பகவான்.. தட்சிணாமூர்த்தி..?
சமீப காலமாகவே கோயில்களில், ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சி தான் இருந்தாலும், நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும், குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதில் வருந்ததக்க விஷயம் என்னவென்றால், தட்சிணாமூர்த்தி சந்நதியில் வரும் பக்தர்களில் 99% பேர் குரு பகவானுக்கு பரிகாரம் செய்ய வருபவர்கள் ஆவர். ஆனால் இப்படி, குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரியா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன..?  விளக்கம் இதோ..

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு:

  • தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சிவ வடிவமும், நவகிரக குருபகவான் என்பவருக்கு கிரக வடிவமும் உள்ளது. அதாவது, தட்சிணாமூர்த்தி சிவன் அம்சம்..மற்றும் குருபகவான் பிரகஸ்பதி ஆகும்.
  • மேலும், தட்சிணாமூர்த்தி என்பவர் கல்லாலின் கீழ் அமர்ந்து கொண்டு நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும், நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவராக கருதப்படுகிறார். அதுபோல, குரு பகவான் என்பவர் நவகோள்களில் வியாழனாக கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு உயிர்களுக்கும் அவர்கள்  முன்ஜென்மங்களில் செய்த நல்ல மற்றும் தீவினைக்கான பலன்களை இடம் மற்றும் காலமறிந்து கொண்டு சேர்ப்பவர் ஆவார்.
  • தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவராகவும், குரு ஒன்பது கோளில் 5ஆம் இடத்தில் இருக்கிறார்..
  • தட்சிணாமூர்த்திக்கு தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் ஏதும் இல்லை. ஆனால், நவகிரக குரு பகவானுக்கு உதயம் அஸ்தமனம் என்ற தன்மைகள் உண்டு.
  • மேலும், தட்சிணாமூர்த்தி என்பவர் தென்முகக் கடவுள் ஆவார். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர் என்று அர்த்தம். நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு வடக்கு திசை ஆகும். 
  • இதிலிருந்து உங்களுக்கு புரிந்து இருக்கும் திசையின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் வேறு வேறு என்று.
  • அதே போல, குரு பகவானுக்கு உரிய நிறம் மஞ்சள் மற்றும் கறுப்பு கொண்டைக் கடலை இவருக்கு உரிய தானியம் ஆகும். தட்சிணாமூர்த்தி வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பவர். 

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி; திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

இவற்றை நினைவில் கொள்!

  • உண்மையில, வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், தட்சிணாமூர்த்திக்கு தவறுதலாக மஞ்சள் நிற ஆடையும், கொண்டைக்கடலை மாலையும் சாற்றுகிறார்கள். இப்படி செய்வதால் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பதாக அர்த்தம்.
  • அதுபோல், ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்கள் வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சொல்ல போனால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமுமே இல்லையாம்.
  • உண்மையில், சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி ஆகும். இவர் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக காட்சியளிக்கிறார். அதுமட்டுமின்றி, இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்றும் போற்றப்படுகிறார். 
  • அதே சமயத்தில், நவகிரகங்களில் ஒன்றான வியாழன்  தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர். இவர் பிருஹஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். மேலும், தேவர்களுக்கு குரு என்ற ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்றும் அழைப்பது வழக்கம். இப்போது குரு மற்றும் தட்சிணாமூர்த்திக்கு உள்ள வேறுபாடு உங்களுக்கு புரிந்தால் மிகவும் நல்லது.

இதையும் படிங்க: Guru Peyarchi 2024 : குரு பெயர்ச்சி பலன்கள் 2024 : மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

யார் இந்த குரு?
சிவபெருமான் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். அவற்றில் ஒன்றுதான் வியாழன். இவர் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பது பழமொழி ஒன்று உள்ளது. அது உண்மைதான். எப்படியெனில், ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றும் சொல்லப்படுகின்றது. அதுமட்டுமின்றி, குரு பலம் இருந்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும்.. புத்திரபாக்கியம் கிடைக்கும்...

இப்படி  குருவின் அருள் கிடைக்க குரு பெயர்ச்சி நாள் அல்லது ஒவ்வொரு வியாழகிழமை அன்றும் பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது, குருவுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, முல்லை மலர் அர்ச்சனை செய்து, கறுப்பு கொண்டைக் கடலை சுண்டல் நெய்வேத்யம் செய்து வழிபட வேண்டும். பிறகு கொண்டைக் கடலை சுண்டலை பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். கொண்டைக்கடலை மாலையை யாருக்கும் போடக் கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இவற்றையும் செய்யலாம்.. அதாவது, வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு பார்த்து சுத்தமான பசும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

யார் இந்த தட்சிணாமூர்த்தி?
ஞானமார்க்கத்தை நாடும் பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை தான் வழிபட வேண்டும். அதுவும்  எந்த நாளிலும் வழிபடலாம். அதுபோல், மனம் சஞ்சலத்தால் அவதிப்படும்  எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவது நல்லது. இப்படி செய்தால், குழப்பங்கள் அகலும், மனம் தெளிவடையும். இப்போது நீங்கள் புரிந்து இருப்பீர்கள்..ஞான குரு வேறு.. நவகிரக குரு வேறு என்ற உண்மையை..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!