புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

By vinoth kumarFirst Published Mar 26, 2024, 9:23 AM IST
Highlights

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில்  குண்டம் திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 11ம்  தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன்  குண்டம் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா 12ம் தேதி இரவு புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம்,  உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று. மார்ச் 19ம் தேதி  இரவு அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. 

இதையும் படிங்க: இந்த 4 ராசிக்காரருக்கு கருப்பு நிறம் ரொம்பவே அதிர்ஷ்டம்..!! யார் அந்த அதிஷ்டசாலிகள்!!

அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர். சரியாக  3.50 மணிக்கு பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து  வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: Kashi Facts : காகங்கள் கரையாது, மாடு முட்டாது.. காசியில் மட்டுமே நடக்கும் நம்ப முடியாத ஆச்சர்யங்கள்..


 
இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.  குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள பண்ணாரிஅம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர். 27 ம் தேதி நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28ம் தேதி மஞ்சள் நீராடுதலும், 29ம் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

click me!