
அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் டிஎன்ஏ. இந்த திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, கருணாகரன், பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ள நிலையில், சத்யபிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சைவி, சாஹி சிவா, ஸ்ரீகாந்த் ஹரிஹரன் உள்ளிட்ட ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர், ‘பர்ஹானா’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று வெளியிடப்பட்ட பிரீமியர் திரையிடலில் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ள ஒருவர் “இந்த படத்திற்கு 5-க்கு 4 மதிப்பெண் கொடுப்பதாகவும், அருமையான கதை, அழுத்தமான நடிப்பு, விறுவிறுப்பான காட்சிகள், தரமான கிளைமாக்ஸ், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வெற்றிப்படம். நிமிஷா சஜயனுக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்கும். படம் பார்ப்பவர்கள் கிளைமாக்ஸ்-ல் கைதட்டுவது நிச்சயம். இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் சமூகப் பார்வை, திரைக்கதை இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “திரில்லரும் உணர்ச்சிகளும் கலந்த ஒரு அரிய காம்போவாக இந்த படம் உருவாகி இருக்கிறது. குழந்தை கடத்தல் வலை பின்னல் பற்றியும், கணவன், மனைவி, தாய், குழந்தையின் உணர்ச்சிகரமான கதையாக இருப்பதாகவும், பரதேசி படத்திற்கு பின்னர் அதர்வாவிற்கு இது ஒரு சிறந்த படமாகவும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு பதிவில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் இதுதான் படம் என்று சொல்வது போல ஒரு படத்தை கொடுத்துள்ளனர். திரில்லர் படமாகவும் அதே நேரத்தில் சலிப்பில்லாத தருணங்களும், விறுவிறுப்பும் உள்ள திரைப்படமாக இருக்கிறது” என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
போதை மருந்து கடத்தல், கேங்ஸ்டர் என்று ஒரே மாதிரியான கதைகளை பார்த்து பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனர் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படத்தைக் கொடுத்துள்ளார். நாம் செய்திகளில் அடிக்கடி பார்க்கும் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை கடத்தல் என்கிற ஒன்லைனில் ஒரு மாறுபட்ட மெடிக்கல் கிரைம் திரில்லருடன் இந்த படம் உருவாகி உள்ளது. காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சுற்றிக் கொண்டிருக்கும் அதர்வாவுக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாக விடுவார் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். நிமிஷா சஜயனை திருமணமும் செய்து வைக்கின்றனர். அதர்வாவும் திருந்தி குடும்பம் மற்றும் வேலை என இருந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பின் நிமிஷா இது தன்னுடைய குழந்தையே இல்லை என்று கத்தி கூப்பாடு போடுகிறார்.
நிமிஷாவின் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. பின்னர் குழந்தையின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு டிஎன்ஏ டெஸ்டுக்கு அனுப்புகின்றனர். டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் இந்த குழந்தை இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையே இல்லை என்பது தெரியவருகிறது. இவர்களுக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? அந்த குழந்தையை யார் என்ன செய்தனர்? குழந்தையை அதர்வா மீட்டாரா என்பது பற்றி ஒரு க்ரைம் திரில்லர் பாணியில் இந்த படம் அமைந்துள்ளது. படம் தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு கதைக்களம் பரபரப்பாக நகர்கிறது. எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் நடக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக வரும் நிமிஷா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வெகுளியான பெண்ணாக வரும்போதும், குழந்தை தன்னுடையது இல்லை என்பதை உணர்ந்து அவர் செய்யும் ஆர்ப்பாட்டமும், வளர்த்த குழந்தையை பிரிய மனமில்லாமல் ஒரு தாயாக தவிக்கும் போதும் அவரின் நடிப்பு நெஞ்சத்தை கலங்க வைக்கிறது.
ஏட்டையாவாக வரும் பாலாஜி சக்திவேல் தனது உடல் மொழியாலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் அதர்வா, ஆக்ஷன், எமோஷன் என இரண்டிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைக்காக தவமிருக்கும் தம்பதிகள் குறித்து அவர் பேசும் வசனங்கள் நெகிழ வைக்கிறது. படத்தின் இறுதியில் வரும் கைலாய வாத்திய இசை ரசிகர்களை கவர்கிறது. இந்த ஆண்டு தமிழில் வெளியான ‘குடும்பஸ்தன்’, ‘டிராகன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரிசையில் டிஎன்ஏ திரைப்படமும் மக்கள் விரும்பும் படமாக வந்துள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்தை பெறுவீர்கள். டிஎன்ஏ என்பது வெறும் மருத்துவம் சார்ந்த வார்த்தை மட்டும் அல்ல அது ஒரு உணர்வும் தான் என்பதை இந்த படம் வெளிப்படுத்துகிறது.