வீடுகளின் மேற்கூரைகளில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்ய இவ்வளவு வழிகள் இருக்கு…

First Published Oct 9, 2017, 1:33 PM IST
Highlights
There are so many ways to repair the water in the roofs of the houses ...


வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த பணத்தில், தங்களது கனவு இல்லத்தைக் கட்டுபவர்கள், அந்த வீடு நீண்ட காலம் நிலைத்துநிற்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் காரணங்களை கண்டறிந்து முன்கூட்டியே அவற்றை தவிர்த்துவிட்டால், நிச்சயமாக வீட்டின் ஆயுள்காலத்தை அதிகப்படுத்த முடியும்.

வெயில் காலத்தில் அதிக வெப்பம், மழைக்காலத்தில் அதிக ஈரம் என்று மாறி மாறி வீடுகள் பாதிப்புக்கு ஆளாகின்றன. இதனால் கட்டிடங்கள் விரைவிலேயே பழுதடைய ஆரம்பிக்கின்றன. கட்டுமானத்தை சேதப்படுத்துவதில் முதலிடம் வகிப்பது நீர்க்கசிவுதான்.

நீர் கசியும் இடங்கள்

அடுக்குமாடி கட்டிடங்களின் அடித்தளத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதி, மொட்டை மாடி, நவீன குளியலறைகள், நீச்சல் குளம் ஆகிய பகுதிகளில் நீர்க்கசிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சுவர்களில் உள்ள இடைவெளிகள், கவனத்தோடு செய்யப்படாத சிமெண்டு பூச்சு, மொட்டை மாடியில் உள்ள சிறு துளைகள் ஆகியவை நீர்க்கசிவிற்கு முக்கியமான காரணங்களாகும்.

இந்த பகுதிகளில் கட்டுமானப் பணிகளின்போதே பாலிமர் பூச்சுகளைப் பயன்படுத்தி நீர்க்கசிவை முற்றிலுமாக தடுக்கமுடியும். சதுர அடிக்கு பத்து ரூபாய் செலவு செய்வதன் மூலமாக, வருங்காலத்தில் பழுது பார்ப்பதற்காக செலவு செய்யும் பல ஆயிரங்களை மிச்சப்படுத்த முடியும்.

பாலிமர் பூச்சு

அதிகளவிலான மழையாலும், வீட்டிற்குள் அமைந்திருக்கும் குளியலறையின் ஈரத்தாலும் கான்கிரீட் பீம்கள் பலத்தை இழக்கின்றன. ஈரத்தால் பாதிக்கப்பட்ட சுவர்கள் கட்டுமானத்தின் கான்கிரீட் பகுதிகளை வலிமையிழக்க செய்கின்றன.

தண்ணீரை அதிகமாக பயன்படுத்தும் குளியலறையிலும், திறந்தவெளி பால்கனிகளிலும் பாலிமர் பூச்சைப் பயன்படுத்தி நீர்க் கசிவை தடுக்க முடியும்.

‘எலெஸ்டோமெரிக் பாலிமர்’

வெளிப்புற சுவர்களுக்கு ‘எலெஸ்டோமெரிக் பாலிமர்’ பூச்சுகளைப் பயன்படுத்தலாம். இவை சுவர்களில் உள்ள சிறு விரிசல்களை சரிசெய்வதோடு, விரிசல்களில் பூஞ்சை மற்றும் ஆல்கா வளர்வதையும் தடுத்து நிறுத்துகிறது.

பாலியூரித்தேன்

மேற்கூரையில் ஏற்படுத்தும் நீர்க்கசிவை தடுப்பதற்கு பாலியூரித்தேன் என்ற ரசாயனப் பொருளை ஸ்ப்ரே செய்யலாம். மேற்கூரையில் பாலியூரித்தேன் ஒரு உறைபோல படிந்து நின்று பாதுகாக்கும். அடித்தளங்களில் ஏற்படும் நீர்க்கசிவை தடுப்பதற்கு பாலியூரித்தேனை துளைகளின் வழியாக உள்ளே செலுத்தவேண்டும்.

சிமெண்ட் பூச்சையும், அதன்மீது பூசுகிற வண்ணங்களையும் கொண்டு மட்டுமே நீர்க்கசிவையும் ஈரத்தையும் தடுத்துநிறுத்திவிட முடியாது.

கூடுதலாக நீர்க்கசிவை தடுப்பதற்கான பூச்சுகளையும் பயன்படுத்த வேண்டும். அவை தரை, சுவர், கூரை என அனைத்தையும் ஒரு கவசம்போல பாதுகாப்பு அளிக்கும் விதமாக இருக்க வேண்டும்.

click me!