சாட்டை துரைமுருகனையும் வேண்டுமென்றே கைது செய்தார்கள். இந்த அரசு எவ்வளவு வன்மமாக உள்ளது என்பதை அவரை ஜாமினில் எடுக்க போராடும்போதுதான் தெரிகிறது. மாரிதாஸுக்கும் அப்படித்தான் இருக்கும்.
திமுக அரசை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆதரவாளரும் வலதுசாரி சிந்தனை உள்ளவருமான மாரிதாஸ், முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்துக்கு தமிழகத்தையும் காஷ்மீரையும் முடிச்சுப் போட்டு பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தொடர்பாக மதுரை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் மாரிதாஸை போலீஸார் கைது செய்தனர். மாரிதாஸ் கைதுக்கு பாஜகவினர் கொதித்து வருகின்றனர். மாரிதாஸ் கைது தொடர்பாக, ‘பாஜகவினர் மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாய் திருப்பித் தருவோம்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதேபோல ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மாரிதாஸ் கைதுக்கு தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாரிதாஸ் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். ““மாரிதாஸ் கருத்து, அவருடைய கோட்பாடுகளில் எனக்கு முரண்பாடு இருக்கு. ஆனாலும், தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஜனநாயக நாட்டில் எதுவும் பேசக் கூடாது என்று மாரிதாஸ் ஆதரிக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது. திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது. சாட்டை துரைமுருகனையும் வேண்டுமென்றே கைது செய்தார்கள். இந்த அரசு எவ்வளவு வன்மமாக உள்ளது என்பதை அவரை ஜாமினில் எடுக்க போராடும்போதுதான் தெரிகிறது. மாரிதாஸுக்கும் அப்படித்தான் இருக்கும்.
மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் உள்ளார். அவர் என்னையும்கூட ரொம்பவே விமர்சித்திருக்கிறார். ஆனால், நான் ஒன்றுமே செய்யவில்லையே.. அதற்காக, கைது செய்வது தவறு.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.