கோவில் பெயரை பயன்படுத்தி 36 லட்சம் மோசடி புகார்.. யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமீன் மனு தள்ளுபடி..

By Thanalakshmi VFirst Published Jun 1, 2022, 4:08 PM IST
Highlights

சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோயில் புணரமைப்பு என்று ரூ 36 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் புழல் சிறையில் உள்ளார்.
 

பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் இளைய பாரதம் என்ற யூடியூபர் சேனலை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், எம்.பி.சுப்ரமணிய சுவாமி, தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலை சீரமைப்பதற்கு இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் நிதி திரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்துசமய அறநிலையத்துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் கோயில் பெயரை பயன்படுத்தி சுமார் 36 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக அக்கோவில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 30 ஆம் தேதி காலை யூடியூபர் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இதனை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிபதி பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனு மீது நாளை நீதிமன்றம் விசாரணை நடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு !

 


 

click me!