திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்ற பிதற்றல், வயிற்றெரிச்சல்.. ஒரே வார்த்தையில் மு.க. ஸ்டாலின் சொன்ன பதில்.!

By Asianet TamilFirst Published Feb 26, 2022, 9:20 AM IST
Highlights

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையையும் மாநில சுயாட்சி உரிமையையும் இன்று அகில இந்தியாவும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. அதுபோன்ற காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சிலர் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று பிதற்றுவதைப் புறந்தள்ளத்தான் வேண்டும். இது பெரியார் மண் என்பதை நம்முடைய இனத்தை அழிக்கக்கூடிய அரசியல் எதிரிகளுக்கு நாம் திரும்பத் திரும்ப நினைவூட்டி நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

தமிழ் இனத்தின் ஆட்சியாக, திமுக ஆட்சியில் இருப்பதை பார்த்து பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னையில் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், “நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்' என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது. வெற்றி பெற்றவன் சொல்கிறானே என்பதால் கோபம் வருகிறது. ஒரு காலத்தில் தோற்று ஓடியவர்களைத் திராவிடர்கள் என்றோமே, ஆனால் இன்று வெற்றி பெற்று நிற்கிறார்களே என்பதுதான் அவர்களுடைய கோபத்துக்கு முக்கிய காரணம். கல்வி மறுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி கொடுத்தது, பொருளாதார உரிமை பறிக்கப்பட்ட இனத்தினர் மேன்மை அடைய, சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் உயர்ந்து நிற்பதுதான், தமிழ்ச் சமுதாயத்துக்கு கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் கொடை. 

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையையும் மாநில சுயாட்சி உரிமையையும் இன்று அகில இந்தியாவும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. அதுபோன்ற காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சிலர் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று பிதற்றுவதைப் புறந்தள்ளத்தான் வேண்டும். இது பெரியார் மண் என்பதை நம்முடைய இனத்தை அழிக்கக்கூடிய அரசியல் எதிரிகளுக்கு நாம் திரும்பத் திரும்ப நினைவூட்டி நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்பதாலும், பெரியாரின் பெரும் பணியை மறைக்க முடியாது என்பதாலும்தான், நம் மீது அவதூறு சேற்றை வாரி இறைக்கிறார்கள். இதுவே எதிரிகளுக்கும் அவர்களின் கைக்கூலிகளுக்கும் முழுநேர வேலையாக இருக்கிறது. 

தமிழின் ஆட்சியாக, தமிழ் இனத்தின் ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதை பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சலாக உள்ளது. எதையாவது சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். அர்த்தம் இல்லாத அவதூறுகளையெல்லாம் அள்ளி வீசுவார்கள். அவை அனைத்தையும் தடுக்கின்ற கேடயத்தைத்தான் திருமாவேலன் தயாரித்திருக்கிறார். அதற்கான போர்வாளைத்தான் அவர் உருவாக்கியிருக்கிறார். பெரியார், தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் என்று நூலாசிரியர் திருமாவேலன் எழுப்பியுள்ள அந்தக் கேள்வியை நானும் கேட்கிறேன், நான் அல்ல, நீங்களும் கேட்க வேண்டும். திராவிட இயக்கம்தான் தமிழர்களின் மகத்தான இயக்கம். இது தமிழர் இயக்கம் இல்லை என்றால் வேறு எது தமிழர் இயக்கம் என்றும் நான் கேட்க விரும்புகிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!