அறிவாலயத்தில் வரிசை கட்டும் சுயேச்சைகள்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த 3 கவுன்சிலர்கள்.!

By vinoth kumarFirst Published Feb 26, 2022, 8:18 AM IST
Highlights

திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டில், சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 108-வது வார்டு, மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் 8-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 3 கவுன்சிலர்கள், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுயேச்சைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து, சுயேச்சைகள் மற்றும் அதிமுக, தேமுதிக, அமமுகவில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 108-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் திமுகவில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;- திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டில், சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதேபோல், சென்னை தெற்கு மாவட்டம், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி 108-வது வார்டு கவுன்சிலரும், அதிமுக கட்சியின் மாவட்ட பொருளாளருமான லியோ சுந்தரம் திமுகவில் இணைந்தார். மதுரை மாநகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுரை மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.

click me!