இத்தேர்தலுடன் அரசியலிலிருந்தே திமுக காணாமல் போய்விடும்... இது தம்பிதுரை ஆருடம்..!

By Asianet TamilFirst Published Apr 6, 2021, 8:53 PM IST
Highlights

இந்தத் தேர்தலுடன் திமுக அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் வாக்களித்த அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளரும் அக்கட்சியின் எம்.பி.யுமான தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2016-இல் சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியை முன்னின்று தேர்தலை சந்தித்தார். இப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை முன்னின்று நடத்திவருகிறார்கள். கடந்த 4 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியைத் தந்துள்ளார். அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.
அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்துள்ளார். அதிமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தியிருக்கிறார். இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மக்களின் எழுச்சி தெரிகிறது. மக்களின் மனக் கணிப்புகள்படி அதிமுகவே வெல்லும். தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக வென்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார். 
திமுக ஒரு குடும்பக் கட்சி. வாரிசு அரசியல் நடத்தும் கட்சி. 2ஜி, 3ஜி என அனைத்திலும் ஊழல் செய்த கட்சி. இந்தத் தேர்தலுடன் திமுக அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும். அதிமுகதான் உண்மையான திராவிட இயக்கம் ஆகும். சமூக நீதிக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் போராடும் இயக்கம்” என்று தம்பிதுரை தெரிவித்தார்.

click me!