காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் பிரதமர் மோடியே திரும்பிப் போ என மக்கள் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிவ் எந்த ஒரு போரிலும் வெற்றி கொள்வதை விட, மக்களின் மனதை வெற்றிக் கொள்வதே முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.
திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியில் பிரதமர் நரந்திர மோடி, முதலில் காலை வணக்கம் என தமிழில் கூறி உரையைத் தொடங்கினார். தற்போது தொடங்கியுள்ள 10வது ராணுவ கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள், 125க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
சோழர்கள் ஆண்ட இந்த பகுதியில் நீங்கள் இன்று இந்த அளவுக்குக் கூடியிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகச் சிறந்த மாநிலமான தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வேத காலத்தில் இருந்து அமைதி, சகோதரத்துவம் இந்த மண்ணில் பரப்பப்பட்டு வருகிறது.
தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி ராணுவம் நன்று அறிந்திருக்கிறது. உலகிற்கு அகிம்சையை சொல்லிக் கொடுத்த நாடு நமது நாடாகும். அகிம்சையை போதித்தாலும், ஆயுத தளவாடங்களின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்தே உள்ளோம். உற்பத்தி, திட்டங்களை செயல்படுத்த நிதி ஒரு தடையாக இருந்து வருகிறது.
பண்டைய காலத்தில் இருந்தே கடல் வணிகத்தில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தளவாட உற்பத்தியில் முன்னிலை வகிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் சென்னையில் உள்ளதாக கூறினார்..
போரில் வெற்றி கொள்வதை விட, மக்களின் மனதை வெற்றிக் கொள்வதே முக்கியம் என்றும் மக்களின் மனங்களை வெற்றிக் கொள்ளவதையே இந்தியா நம்புகிறது என்றும் தெரிவித்த மோடி நாம் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும் நிலை மாறி, நம்மிடம் கொள்முதல் செய்யும் நிலை உருவாக வேண்டும் என்று பேசினார்