
பாஜக சித்தாந்தத்துக்கு ஆதரவாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது தொடர்ந்து திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை புறக்கனிப்பு
கோவையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த வாரம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது எனக்கு பேச வாய்ப்பு வழங்கினார்கள். அப்போது கோவை மக்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கை இல்லை எனபதையும் தெரிவித்தேன். மேலும் ஓர் ஆண்டுக்கும் மேலாக புதிய சாலைகள் போடப்படாமல் இருப்பதையும் சட்டப்பேரவையில் பதிவு செய்தேன். சட்டப்பேரவையில் என்னை பேசவே விடாமல் பல அமைச்சர்கள் வரிக்கு வரி இடையூறு செய்துகொண்டே இருந்தனர். நான் சட்டப்பேரவையில் பேசியது தொடர்பான வீடியோக்களைகூட இந்த அரசிடம் இருந்து என்னால் பெற முடியவில்லை.
பாஜகவினர் மீது நடவடிக்கை
ஆனால், அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகிறது. எனவே, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாகவும் நேரடியாகவும் ஒளிபரப்புபு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், .......... மட்டும் கிடைத்தது என்று பேசினேன். ஆனால், அதில் ....... என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டனர். சிறு குறு தொழில்களை ஊக்கப்படுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லை. தமிழக பட்ஜெட்டில் கோவை முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக சித்தாந்தத்துக்கு ஆதரவாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது தொடர்ந்து திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குரலை நசுக்குவதா?
திமுகவை விமர்சனம் செய்யும் பாஜக ஆதவாளர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஏபிவிபி அமைப்பின் சுப்பையா உட்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர் மீது புகார் கொடுத்த பெண்ணே சமரசம் ஆகிவிட்டோம் என்ற சொன்ன பின்னரும் நடவடிக்கை தொடர்கிறது. சுப்பையா செய்த தவறுக்கு ஆதரவு கொடுக்க வில்லை. ஆனால், சுப்பையா மீதான வழக்கில் கூடுதல் வழக்கு பிரிவுகளை இந்த அரசு போட்டுள்ளது. இந்த அரசு பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அவர் செய்த தவறா, இல்லையா என்ற விவகாரத்துக்குள் செல்லவில்லை. அரசு ஏன் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது? அரசு மீது விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை? கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குவதா?
வரி வருவாயை பகிர்ந்த பாஜக அரசு
மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இலக்கு வைத்ததை செய்ய முடியவில்லை. ஆனால், மத்திய அரசு நிதி வருவாயை பகிர்ந்து அளித்திருக்கிறது. 24 சதவீதம் உயர்ந்த வரி வருவாயை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. மத்திய அரசு வரியை வசூல் செய்து தமிழகத்துக்கு கொடுக்கின்றது. ஆனால், மாநில அரசு நிதி வருவாயை வசூலிக்க எதுவும் செய்யவில்லை” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.