திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்குமா..? டவுட் கிளப்பும் நயினார் நாகேந்திரன்.!

By Asianet TamilFirst Published Sep 17, 2021, 9:23 PM IST
Highlights

திமுக ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது கிடையாது. இந்தத் தேர்தலும் நியாயமாக நடைபெறுமா எனபது சந்தேகம்தான் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக கூட்டணி எண்ணிக்கை அளவில்தான் பலமாக இருக்கிறது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகுதான் மக்களின் எண்ணங்கள் தெரியவரும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் எந்தெந்த இடங்களில் போட்டி என்பது குறித்து அதிகாரப்பூர்வ தெரிய வரும்.
டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். எனவே, தசரா போன்ற திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசு இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இது இந்து விரோத போக்கையே காட்டுகிறது. நீட் தேர்வு வைத்து திமுகதான் அரசியல் செய்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதில் திமுக அங்கம் வகித்தது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆசிரியர் உள்பட பல்வேறு பணிகளுக்கும் தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தகுதித்தேர்வை நீக்க முயற்சிக்கக் கூடாது. மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி பாடத் திட்டத்தை திமுக அரசு மாற்றி அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது கிடையாது. இந்தத் தேர்தலும் நியாயமாக நடைபெறுமா எனபது சந்தேகம்தான்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 

click me!