கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வெற்றிடத்தை ரஜினிகாந்த்தான் நிரப்புவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கலந்து கொள்ள வந்தார்.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மன்னன் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் அகமது கபீர் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் ராஜா பரமசிவம், கதிரவன், சுப்பிரமணியன், வெங்கடாசலபதி, மணி, செந்தில்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜெ.தீபா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "சமூக வலைதளத்தில் என்னுடைய பெயரில் பலர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள், யாரோ சொல்வது எல்லாம் என்னுடைய கருத்துகளாக வெளிவருகிறது. அது கண்டிக்கதக்கது.
பெரியார் குறித்து எச்.ராஜா சொன்ன கருத்து மிக தவறான கருத்தாகும். மேலும் சர்ச்சைக்கு உரிய கருத்தும் கூட. சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய அதிகாரம் அவருக்கு இல்லை.
இது தமிழகம், டெல்லி தர்பார் இல்லை. அங்கு வேண்டும் என்றால் யார் சிலையை வைக்க வேண்டும் என அவர் முடிவு செய்து கொள்ளலாம். தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என சொன்னது மிகவும் கொடூரமான ஒரு விமர்சனம். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு காவிரி பிரச்சனையில் இதுவரை செயல்படாமல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதை அமைக்க தமிழக அரசும் உரிய அழுத்தம் தரவில்லை.
தற்போது தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உள்ள ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சியாகும்.
ரஜினிகாந்த் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் அது வரவேற்கதக்கது. ஜெயலலிதா இல்லை என்பதைதான் வெற்றிடம் என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த்தான் நிரப்புவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.