களம் மாறி மோதும் ஆண்டிப்பட்டி தொகுதி... தங்கதமிழ்செல்வனை வீழ்த்துமா அதிமுக..?

By Thiraviaraj RMFirst Published Dec 16, 2020, 11:01 AM IST
Highlights

தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டால் முருக்கோடை ராமர் அதிமுக சார்பில் டஃப் கொடுப்பார் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என முதல்வர்களை தந்த அதிமுகவின் செல்லத் தொகுதி ஆண்டிப்பட்டி. ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தங்கதமிழ்செல்வன். ஜெயலலிதாவுக்காக ஒருமுறை தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதிமுகவில் இருந்தவரை இந்தத் தொகுதியில் மிகவும் செல்வாக்குள்ளவராக வலம் வந்தார். தற்போது திமுக சார்பாக அமமுகவிலிருந்து சென்றுள்ள தங்கத்தமிழ்செல்வன் அங்கு போட்டியிட தனக்கு வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல். திமுகவுக்கு சென்றுள்ள அவர் முதல் முறையாக அந்த கட்சிக்கு சென்றபின் போட்டியிட இருக்கும் முதல் தேர்தல். இந்தத் தேர்தலில் அவர் களமிறங்கினால் பழைய செல்வாக்கோடு வெற்றிபெற முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

அதேவேளை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த மகாராஜன் மீண்டும் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு அதிமுக சார்பில் முன்பு போட்டியிட்ட லோகிராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அதிமுவிற்கு தோல்வி உறுதி என்கின்றனர் ஆண்டிப்பட்டி அதிமுகவினர். அங்கு முருக்கோடை ராமர் என்பவரும் அதிமுக சார்பில் வாய்ப்புக் கேட்டு வருகிறார். இவருக்கு முக்குலத்தோர் வாக்கு மட்டுமின்றி காவுடர், நாயுடு, பிள்ளை, செட்டியார் ஓட்டுமட்டுமல்ல தேவேந்திர சமூக வாக்குகளும், ஆதிதிராவிட வாக்குகளும் கிடைக்கும் என்கிறார்கள்.  தற்போது தேனி மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார் முருக்கோடை ராமர். 

தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டால் முருக்கோடை ராமர் அதிமுக சார்பில் டஃப் கொடுப்பார் என்கிறார்கள். ஏற்கனவே இருவருக்குமான போட்டி தேனி மாவட்டத்தில் மிகப்பிரபலம். அன்றே இவர்களின் பிரச்சனை ஜெ. வரை சென்றது குறிப்பிடத்தக்கது. அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் விலகியபோது அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என தீர்மானம் போட்டவர்தான் இந்த முருக்கோடை ராமர். ஆக இம்முறை இருவரும் எதிர்த்து போட்டியிட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி அனல் பறக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

click me!